Skip to main content

ஒளி மாதிரி ஒன்று

 



புலராத 

அதிகாலையிலேயே

மருத்துவமனை வளாகத்தில்

கூட்டம் கூடி விட்டது.


முதலில்

அவர்கள் டோக்கன் வாங்க வேண்டும்

அந்த டோக்கனைக் காட்டி 

சீட்டு வாங்க வேண்டும்

அந்த சீட்டைக் காட்டி

மருத்துவரை வாங்க வேண்டும்.

மருந்துச் சீட்டைக் காட்டி 

மருந்துகள் வாங்க வேண்டும்


டோக்கன் கொடுக்கும் 

அந்த ஒல்லிப்பெண் மருத்துவமனைக்கு வெளியே

 எவ்வளவு பாவம் தெரியுமா?


“ எங்கயோ அந்த மகராசிய இன்னுங் காணல…” என்று முனகுகிறார் ஒரு முதியவர்.


பிணி நீங்கும் முன்பே

மருத்துவமனையை விட்டு  

ஓடி விடுகிறவர்கள்

எதிலிருந்து தப்பிக்கிறார்கள்?


எல்லா முகங்களிலும்  அப்பிக் கிடக்கிறது கும்மிருட்டு


கல்லிடுக்கில் எழுந்து கொண்டிருக்கும்

கதிரவன்  

மெல்ல வரட்டும்


இப்போதைக்கு 

நான் டியூப் லைட்களை போட்டு விடுகிறேன்.


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை