குலாவியபடியே என்னைக் கடந்து செல்கிறார்கள் இரு தோழியர். தோள்களை உரசிக் கொண்டு க்ளூக், க்ளூக் என்று சிரித்துக் கொண்டு மெல்ல மெல்ல நடந்து செல்கிறார்கள். பார்க்காமல் இருக்க இயலாத காட்சி அது எழ வேண்டிய தருணத்தில் சரியாக எழுந்த வயலின் கீற்று போல் அவர் ஆட்காட்டி விரலிரண்டும் ஒரு சேர எழுந்து தொட்டுக் கோர்க்கின்றன. " பார்த்தாயா" என்பது போல் எழுந்து கொண்டிருக்கிறது உதயத்தின் புத்தொளி அவர்கள் அப்படியே நடந்து நடந்து தூரத்தில் மறைகிறார்கள். நெருங்கி வருகிறது ஒரு இனிய துயர் |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments