நரை கூடக் கூட குயில் கூவத்துவங்கி விடுகிறது. “குயில் ஒரு க்ளிஷே” என்று சொன்னவன் ஒரு அதிரடி ஆட்டக்காரன் அவன் தலையைக் குனிந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறான் குயில் இன்றில் அமர்ந்து நேற்றைப் பாடும் ஒரு பறவை அதன் மரத்தடியில் அவன் நெடுநேரம் அமர்ந்திருக்கிறான் க்கு…கூ... க்கு…கூ... க்கு. .கூ... ஒவ்வொருவனுக்கும் நினைத்து ஏங்க ஒன்றுண்டு அல்லது நினைக்க ஒன்று வேண்டும் என்று அவன் எப்போதும் ஏங்குகிறான் முதுமையைத் தேற்ற ஒரு சின்னசோகம் அவசியம் குயில் அதன் வாத்தியம். |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments