நரை கூடக் கூட குயில் கூவத்துவங்கி விடுகிறது. “குயில் ஒரு க்ளிஷே” என்று சொன்னவன் ஒரு அதிரடி ஆட்டக்காரன் அவன் தலையைக் குனிந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறான் குயில் இன்றில் அமர்ந்து நேற்றைப் பாடும் ஒரு பறவை அதன் மரத்தடியில் அவன் நெடுநேரம் அமர்ந்திருக்கிறான் க்கு…கூ... க்கு…கூ... க்கு. .கூ... ஒவ்வொருவனுக்கும் நினைத்து ஏங்க ஒன்றுண்டு அல்லது நினைக்க ஒன்று வேண்டும் என்று அவன் எப்போதும் ஏங்குகிறான் முதுமையைத் தேற்ற ஒரு சின்னசோகம் அவசியம் குயில் அதன் வாத்தியம். |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments