Skip to main content

இசை கவிதைகள் - வாசகசாலை




விச்ராந்தியின் முன் நிற்றல்



பெசண்ட் நகரில்

கடலுக்குச் செல்லும் வழியில் உள்ளது

விச்ராந்தி


நண்பர்கள் நாங்கள்

ஒரு நாள் தவறினாலும்

மறுநாள் கூடிவிடுவோம் அங்கு


விச்ராந்தியின்

முன் நிற்பதற்கு

தூர தூரங்களிலிருந்தும்

ஆட்கள் வருகிறார்கள்


அங்கு

பென்னம் பெரிய ஒரு மரமுண்டு

அதுதான் அனைவரையும்

அழைத்து வருகிறது

என்று சொல்லப்படுவதுண்டு

ஆனால்

அது உண்மையின் ஒரு துண்டுதான்


மனிதருள் மரமுண்டு

நிழலுண்டு

விச்ராந்தியின் முற்றத்திற்கு

மரங்கள்

வருகின்றன , போகின்றன


விச்ராந்தியின் முன் நிற்கும் ஒருவன்

சிகரெட்டை கொளுத்தினால்

அவன் வாயிலிருந்து

ஏகாந்தம் மிதந்து செல்வதைக் காணலாம்


மனிதர்கள்

சமயங்களில்

துணிந்து முடிவெடுத்து விடுகிறார்கள்

சிரிப்பைச் சவுக்கால் அடித்து  விட முடியாது


விச்ராந்திக்கு

கண்ணோ, மூக்கோ கிடையாது

அது ஒரு முழு காது


விச்ராந்தியின் முன் நின்று

புகைப்படம் எடுத்துக் கொண்டால்

படத்தில்

நாம்

ஒரு டீ கடையின் முன்

நிற்பது போலவே தோன்றும்.


    •


த்மாநாமின் புதிய கவிதை



ஒரு ரோஜா நாற்று வாங்கி வந்தேன்


வீட்டில்

அதற்கு எந்த இடம் பிடித்திருந்ததோ

அந்த இடத்தில் நட்டு வைத்தேன்.


ஒளி தந்தேன்

நீர் தந்தேன்

இவை தவிர

ரோஜாக்கள் பூக்க

எது முக்கியம் என்று

ஆத்மாநாம் சொன்னாரோ

அதை

அள்ளி அள்ளிக் கொடுத்தேன்.


கொடுத்துக் கொண்டே இருந்தேன்


வருத்தம் தோய்ந்த முகத்துடன்

ஒரு நாள் அவர் வந்திருந்தார்…


“ இன்னும் ரோஜாக்கள் பூக்கவில்லையா? “


“மணம் வர மலர் அவசியமில்லை என்று தோன்றுகிறது” என்றேன்.


புன்னகைத்தபடியே சென்று விட்டார்.


    •


நான்கின் நானூறு



காதல் அப்படித்தான்

திடீரென

புரட்டிப் போட்டுவிடும்


இடிபாடுகளின்

மூச்சுமூட்டும் இன்பத்துள்ளிருந்து

நீ ஒரு செய்தி அனுப்பியிருந்தாய்


அதில் சொற்களே இருக்கவில்லை.


மனிதனை

எமோஜிகள் மேய்க்கத் துவங்கிவிட்ட காலத்திலும்

உன் செய்திக்குள்

அவற்றால் நுழைய முடியவில்லை


வெறுமனே நான்கு புள்ளிகள் இட்டிருந்தாய்


அது ஒரு வெண்திரை

ஆகவே

அதில் பெருகி வழிந்தன

பல நூறு வண்ணங்கள்


முதன்முதலாக

ஒரு குழந்தை

கோலிக்குண்டைப் பார்த்த கண்களால்


அவற்றை


உருட்டி


உருட்டி


உருட்டி உருட்டி

பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

   


    •


ங்கள் கனவுகளில்

சிவராமன் வரத் துவங்கி விட்டாரா?



ரம்யமானதொரு மாலை வேளையில்

வானத்தை அண்ணாந்து பார்த்தால்

அங்கு

உன் பக்கத்து வீட்டுக்காரன்

அவனுடைய சொகுசு காரின் மீது

பெரிய மூங்கில் சேரைப் போட்டு

அதில் அமர்ந்து

புகை பிடித்துக் கொண்டிருக்கிறான்.


மாடிப்படிகள் ஏறுவது

கடினமாக இருப்பதால்

அப்போது

ஒரு பாடலை முணுமுணுக்கிறாய்


பாடச் சொன்னால்

படியேறத் துவங்கிவிடுகிறாய்


சாலையில் விரைந்து கொண்டிருப்பதாய் தோன்றும்

உன் வாகனம்

உண்மையில்

இன்னும் வீட்டை விட்டு கிளம்பவில்லை

அல்லது

அலுவலக கோப்புகளை

புரட்டத் துவங்கி விட்டது


நீ

நடனமாட நடனமாட

உன் இரண்டு குழந்தைகளில் ஒன்றுக்கு

கட்டாயம்

காய்ச்சல் உயரத் துவங்கிவிடுகிறது


சித்த வைத்தியம் சிறந்ததுதான்.

சிவராமனும் நல்லவர்தான்

ஆனால்

அவர் உன் கனவு வரை வருகிறாரெனில்,

நீ ஏதாவது

குளிகைகள் எடுத்துக் கொள்வது அவசியம்


நீ

கண்ணாடி பார்க்கையில்

அதில் சிந்தனைகள்

தெரியத் துவங்கி விட்டன.


“மருந்துண்னும் போது குரங்கெண்ணக் கூடாது”

என்று சொல்லி வைத்தவன்

ஒரு சாதாரண மருத்துவனில்லை

என்கிற உண்மையின் முன்

கண்கலங்கி நிற்கும்

எனதருமைத் தம்பி…!


இந்தக் கவிதையை எடுத்துக் கொள்…


சந்தேகித்துக் குழம்பாதே!


தயங்கித் தயங்கி நிற்காதே!


இந்தா,

இந்தக் கவிதைக்கு பத்தியம் ஏதுமில்லை.



நன்றி : வாசகசாலை

https://vasagasalai.com/isai-poems/


Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான