Skip to main content

இசை கவிதைகள் - அகழ்


கார் எனில் மயில்

“மயில் தோக விரிச்சு நிக்குது”
என்றாள்.

“மயிலா…. எங்கே… ?”
என்றேன்
திகைத்தபடி.

“எங்கும் “
என்றாள்
சிரித்தபடி.

OOO

இதில் மறைஞானம் ஒன்றுமில்லை தம்பி!

நான் பிறக்கும் போதே
பாதி மின்னலோடு பிறந்தேன்
மின்னும் எதனுடனும்
சட்டெனப் பின்னிக் கொள்கிறது
என் மின்னல்

நீ பிறக்கும் போதே
பாதி மலரொடு பிறந்தாய்
மலரைக் காண்கையில்
அவிழ்வது அதுதான்

அவள் கொஞ்சம்
அந்திப் பொன்
அந்தி அந்தியில் கரைந்து கொண்டிருக்கிறது

அவனே எண்ணிக் கொண்டிருக்கும்படி
அப்படியில்லை அவன்
கண்ணீர்தான் கண்ணீரை
அணைத்துக் கொள்கிறது

இரண்டு பாதிகள்
வட்டம் காணும் திருநாளில்
வந்து நிற்கிறது
பெளர்ணமி

OOO

களம் பல கண்டவரின் கடைசிச் சொற்கள்

அவர் வீட்டிலிருந்து கிளம்புகையில்
இனி யோசிக்க ஒன்றுமில்லை
என்கிற முடிவுக்கு வந்திருந்தார்

ஆனால்
வழியெங்கும் யோசித்துக் கொண்டே வந்தார்

அந்தப் பாலத்தின் மீது நின்று கொண்டு
மேலும்
ஒரு மணி நேரம்
தீவிரமாக யோசித்தார்.

இனி யோசிக்க ஒன்றுமில்லை
என்பது உறுதியானவுடன்
“கடைசியில் எல்லாம்
சாதாரணக் காதல்கதைகள் தானா?” என்று
குனிந்தவாக்கில்
ஏரித் தண்ணீரை நோக்கிக் கேட்டார்.
பிறகு
அவ்வளவு உயரத்திலிருந்து
அதற்குள் பாய்ந்தார்.

“கடைசியில் எல்லாம் சாதாரணக் காதல் கதைகள்தான்”
என்று சொல்லியிருக்கலாம்.

இப்போது பாருங்கள்….
நாம் திரும்பவும்
முதலிருந்து யோசிக்க வேண்டியிருக்கிறது.

OOO

ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை

நீ
தலைகுனிந்து வணங்குகையில்
சுடர்
விளக்கிலிருந்து
உன் கன்னங்களுக்குத் தாவுகிறது.

தீ இனிது;
கன்னங்கள் இனியன;
உயிர் சுவையுடையது;

தீ நின்று எரியட்டும்!

தீயை வாழ்த்துகிறோம்!
கன்னங்களைப் புகழ்கிறோம்!

கன்னங்களில் எரிகிற தீயே !
உன்னைத் தொழுகிறோம்.

OOO

டிவி பார்க்கையில் ஆழமாக சிந்தித்தல் தீங்கு விளைவிக்கும்

இரண்டு நாட்களாக  வானம்
மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்
மாலையிலிருந்து மழை விட்டுவிட்டு
பெய்யத் துவங்கலாம்.

எப்போது விடும்
எப்போது பெய்யும்
என்பதைச்  சொல்ல முடியாது
எங்கு பெய்யும், எங்கு விடும் என்பதையும்

சில இடங்களில் மிதமான மழையும்
சில இடங்களில் கன மழையும்
சிலதில் அதி கன மழையும்
ஓரிரு இடங்களில்
மிக அதி கனமழையும் கொட்டக் கூடும்

தாழ்வான பகுதிகளில். வசிப்போர் பத்திரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மண் சரிவு காரணமாக
சாலையில் திடீர் பள்ளங்கள் உருவாக
வாய்ப்புண்டு

புயல் காரணமாக
மரங்கள் அடியோடு சாய வாய்ப்புண்டு
மேலும்
மரத்தடியில் நின்றால்
மின்னல் தாக்கவும் வாய்ப்புண்டு.

மேக வெடிப்பும் நிகழலாம் என்று நம்பப்படுகிறது

மின் கம்பிகள் பற்றி எரியும்
அறுந்து விழும்

உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளன
ஹெலிகாப்டர்கள் பழுதானால் உடனடியாக சரி செய்யப்படும்

எதுவெல்லாம் நிகழ வாய்ப்பிருக்கிறதோ,
அதுவெல்லாம் நிகழ் வாய்ப்புண்டு

ச்சீ, என்ன இது குழந்தை மாதிரி…
வானிலை அறிக்கைக்குப் போய்
யாராவது அழுவார்களா செல்லமே?

நன்றி : அகழ்

https://akazhonline.com/?p=8756

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.