Skip to main content

இசை கவிதைகள்



ஒருமையை உழுகையில் முதல் போகம் விளைகிறது

மரியாதை
மிகவும் மரியாதையானது

உயர்தரத்து வாசனை திரவியம்
பட்டுச் சரிகையின் டாலடிப்பு
வானளாவிய கட் அவுட்
கீழ்படிதலுள்ள மாணவனின் விண்ணப்பம்

காதலோ
சேற்றுப் பன்றிகளின் கும்மாளம்
ஒருவர் மீது ஒருவர் ஏறிப்படுக்கும்
இட நெருக்கடி

மரியாதையின்
பாதுகாப்பான இடைவெளியிலிருந்து
காதலின் கட்டற்ற களிப்பிற்கு
மெல்ல
அழைத்துச் செல்கிறது
ஒருமை

‘டா’ வும், ‘டி’ யும்
முதன்முறை
மூக்குரசிக் கொள்கையில்
சடசடத்ததெதுவோ
அதைத் தேடித்தான்
படுக்கையைக் கிளறுகின்றன
இரண்டு அம்மண உடல்கள்.


000


பார்த்திருத்தல்


“வானத்தை அண்ணாந்து பார்க்கையில் மனிதன் ஏன் அவ்வளவு விடுதலையடைகிறான்?”

என்று கேட்டான் ஒரு நண்பன்.

அந்தக் கேள்விக்கு
விரிவாக விடையளிக்கும் தோரணையில்

நானும்
அண்ணாந்து பார்த்தேன் வானத்தை

அவன்
பதிலறிவதற்காகக் கேட்கவில்லை.

நானும்
பதிலளிப்பதற்காக பார்க்கவில்லை

000



‘ஆலாப்’பில் மிதக்கும் அலுவலகம்


எவனோ ஒருவன்
காற்றில்
ஒரு ‘ஆலாப்’பை ஏற்றி விட்டிருக்கிறான்

அது
ஒரு அரசு அலுவலகத்துள் நுழைகிறது

கோப்புகள் கலைகின்றன
தாள்கள் படபடக்கின்றன

நிலம் குலுங்குகிறது
ஒருவரும் அலறவில்லை

கண்ணாடிகள்
உடைந்து நொறுங்கியதில்
பூக்கள் சிதறிக் கிடக்கின்றன

அசையாத உறுதியால்
சபிக்கப்பட்டிருந்த
படிக்கட்டுகள்
எழுந்து பறக்கின்றன

நாற்காலியின்
ஒரு கால் உடைந்து
தலைகுப்புறச் சாயும் ஒருவன்
தெய்வத்தின் மடியில்
சரிகிறான்

அதோ அந்த
இளநிலை நிர்வாக அலுவலர்
இதற்கு முன்பும்
எத்தனையோ முறைகள்
அழுது தீர்த்தவர்தான்

ஆனால்

ஏன் அழுகிறோம்
என்பதே அறியாமல்
அவர்
இப்படி அழுவது
இதுவே முதன்முறை.


நன்றி : அகழ் 

https://akazhonline.com/?p=9782


Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...