Skip to main content

Posts

Showing posts from July, 2025

எழுந்தருளல்

  ப ழக்கதோஷத்தில் நான் கிள்ளிப் பூசிய திருநீற்றின் மீது நீ  தொட்டுத் தீட்டிய தீற்றலில் எழுந்ததொரு தெய்வம் அவ்வளவு கும்பலுள் அதை நான் மட்டுமே பார்த்தேன் நான் மட்டுமே பாடினேன் அதற்கு ஆயிரமாயிரம் கரங்கள் அத்தனையத்தனை விழிகள் ஆயினும் நான் “ போதும்” என்று   சொல்லிவிட்டேன்

"போகாதே….!"

  பே ருந்தோ ரயிலோ காத்திருக்காது வீடு பொறுக்காது வேலை பொறுக்காது அந்த நான்கு பேர் உறுதியாகப் பொறுக்க மாட்டார்கள் எனக்குத் தெரியாதா என்ன? என் முகம் வாடுவது கண்டு பூதலத்தில் எதுவொன்றும் வாடி விடாது கண்ணீரை  நான் எவ்வளவு காலமாய் கண்டுவருகிறேன் என் கண்ணீர்… அம்மாவின் கண்ணீர்.. பாட்டியின் கண்ணீர்.. அவள் பாட்டியின் கண்ணீர்.. மானுடம் தோன்றிய காலம் தொட்டு கண்ணீரால் எதையுமே  தடுத்து விட முடிந்ததில்லை ஆனாலும் சொல்வேன்… "போகாதே…!"

காதலில் தோல்வியுண்டோ கண்மணி?

  கா தலில் தோல்வி என்றானவுடன் நேராக பெட்டிக் கடைக்குச்  செல்கின்றனர் சிலர் காதல் தோல்வி சிகரெட்  என்றொன்றுண்டு. என் பால்யத்தில் சசியண்ணனை  அந்த சிகரெட்டுடன் பார்த்திருக்கிறேன் மாலை இருளுள் ரயில்வே ஸ்டேசனின் நீளமான சிமெண்ட் பெஞ்சில்  தனியே அமர்ந்திருந்தார் அப்போது கன்னங்களில் வற்றிய கண்ணீர்த் தடம் ஆயினும் முகமென்னவோ இருண்டுவிட வில்லை அதில் வேறொரு வெளிச்சம் உலகைக்  கொன்று புதைக்கும் வெறிக்கு பதில் அவர் வாய்க்கால் பறவைக்கு  பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மிக மிக உறுதியாக அவர் சிங்கத்தின்  வாயினுள் இல்லை அந்த இதழ்கடை இனிப்பு கூட எனக்கு இப்போதும்  நினைவிருக்கிறது. காதலில் தோல்வி கண்டவரின் கேசத்தை அலசுவதற்கென்றே ஒரு காற்றுண்டு என்பதை அன்றுதான் கண்டு கொண்டேன் அவ்வளவு அழகை  அள்ளிக்கொண்டு வரும் காற்று காதல் தோல்வி சிகரெட்டுகள் என்றொரு வகையுண்டு தான் நான் என் முதல் சிகரெட்டை ஏற்றுகிறேன் அதோ… அந்தக் காற்று வருகிறது

மிக வலுவான காரணம்

  பொ துவாகவே குடிகாரன்களை சமாளிப்பது கடினம் அழுகாச்சி குடிகாரனென்றால் அதைவிடக்  கடினம் நாசூக்காக  கைக்குட்டைக்குள் கண்ணீர் சிந்துபவர்களுக்கு மெதுவாகத் தோளைத் தொட்டால் போதும் குடி  முதலில்  நாசூக்கைத்தான் குடிக்கிறது ஆகவே அவர்கள் குடம் குடமாகக் கொட்டுவார்கள் ஏன் அழுகிறார்கள் என்பதற்கான காரணத்தை அவ்வளவு துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியாது என்பதால் ஆறுதலுக்கான சொற்களையும் சரியாகத் தேர்ந்து விட முடியாது இப்படித்தான் இன்று என்னவோ சொல்லப் போய் “ ஆமாம்…நீ அதில் உன் அம்மாவைத் தேடி விட்டாய்…”  என்று சொல்லி விட்டேன். பிறகோ மண்ணில் கிடந்து புரளத் துவங்கி விட்டான்.