“சத்தியம் தோற்பதில்லை!" இதைச் சொன்ன போது என் நெஞ்சம் விம்மியது கண்கள் கொஞ்சம் கலங்கின முஷ்டி தானாகவே விண்ணை முட்டியது. "என்னையா அழைத்தாய்.."? என்று கேட்டு என்னை நோக்கி சத்தியங்கள் எழுந்து வந்தன. வெள்ளையில் கருப்பில் கருப்பு வெள்ளையில் பழுப்பில் ஆரஞ்சில் ஊதாவில் கலக்கவே முடியாத கலவைகளில் வானவில்லின் நிறத்தில் கூட ஒன்று இருந்தது. "என்னையா அழைத்தாய்...? இந்த முறை கொஞ்சம் சத்தமாக கேட்டன நான் அதைவிடச் சத்தமாய் அண்ணாந்து கூவினேன்... "எப்படியாயினும் ஏதோ ஒரு சத்தியம் தோற்பதில்லை" |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments