பாடகர் பாடுகிறார் பாடிக் கொண்டிருக்கிறார் பாடிக் கொண்டிருக்கிறார் பாடகர் ‘பாடத்’ துவங்கும் தருணம் என்றொன்றுண்டு பாடகர் ‘பாடத் ‘ துவங்கி விட்டார் “ ஓ..” என்றெழுந்ததொரு வாத்தியம் “ம்” என்றொரு வாத்தியம் “ஆஹா..” என்று எங்கோ துள்ளியதொரு வாத்தியம் “ ச்….” கொட்டி மறைந்ததொரு வாத்தியம் “வாவ்..” வாய் திறந்து கூச்செரியும் வாத்தியங்கள் ஆங்காங்கு தாயைத் திட்டி ஒரு கெட்ட வாத்தியம் பிளாஸ்டிக் சேர் வாத்தியங்கள் செருப்புக் கால் வாத்தியங்கள் நெஞ்சத்து ஆனந்தம்…. அது ஒரு நிகரற்ற வாத்தியம் வாத்தியங்கள் கூடிக் கூடிப் பெருகியதில் மேடை கொள்ளவில்லை இதோ.. இந்த மேடை சமத்தில் சரிவதைக் காண்கிறேன் மேடை, அரங்கு என்று இரு வேறில்லை இப்போது |
கடவுள் எனக்குச் செய்யும் ஒரே ஒரு உருப்படியான காரியம் அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டு விடுவதுதான் இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள் ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள் என்னைத் தூரத்தில் கண்டதுமே சர்க்கரை குறைவான, ஆற்றாத தேநீர் ஒன்றை தயாரிக்கத் துவங்கி விடுகிறார் கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர் நான் வரும் முன்பே என் வழக்கமான டேபிளில் டீ வந்து அமர்ந்திருக்கும். அதை ஒரு பூச்செண்டு என்று உணர்ந்த கொண்ட நாளில் அவருக்கே கேட்காதபடி கண்ணீரை மறைத்துக் கொண்டு அவரைத் " தோழர்! " என்றழைத்தேன்.

Comments