அவருக்கு 7 பற்களை கட்டாயம் அகற்றியாக வேண்டும் இரண்டு தவணைகளில் என்பது ஒரு சின்ன சலுகை. அவருக்குத் தேக பலமில்லை செல்வ வளமில்லை. அம்மா இறந்து போய் ஆண்டுகள் இருபது ஆகிவிட்டன வந்த அம்மாக்களோ சென்று விட்டனர் ‘வெடுக்’ , ‘வெடுக்’ என்கிற வலியைத் தவிர இப்போது அவருடன் வேறு ஒருவருமில்லை பற்றும் கரங்கள் அற்றவருக்கு தவறும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை கடைவாய்ப் பஞ்சைத் தாண்டி குருதி வெளியே கொட்டினால் அதைத் துடைக்க கொள்ள அவரது இரண்டு கைகளும் நலமுடன்தான் திகழ்கின்றன. எளிதில் அசைந்து தராத பல்லை குறடால் அழுத்தி வலு திரட்டி இழுக்கையில் நினைத்துக் கொள்வதற்கென்றே அவருக்குச் சில நினைவுகள் உண்டு ஆகவே அவர் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments