Skip to main content

கர்த்தரின் வருகை
சமீபமாயிருக்கிறது

கர்த்தர் வருகிறார்
அவர் நமக்காய் கொண்டு வரும்
புளித்த அப்பங்கள்
ரொம்பவே புளித்து விட்டன
ஆனால், கர்த்தர் வருகிறார்

உங்கள் அன்பில்
நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம்
உங்கள் காதலியை
புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம்
கர்த்தர் வருகிறார்

பாதி வழியில் அவர் வாகனம்
பழுதாகி நின்று விட,
அவர் நடந்து வருகிறார்
ஆனாலும் கர்த்தர் வருகிறார்

இன்னுமொரு தேர்தல் முடியட்டும்
இன்னொரு மக்களாட்சி மலரட்டும்
கர்த்தர் வருகிறார்

எப்போதும் மிரட்டிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் மிரட்டட்டும்
எப்போதும் இறைஞ்சிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் இறைஞ்சட்டும்
இரட்சிப்பின் நாயகர் வருகிறார்

கர்த்தர் ஒருவரே
அவருக்கு உதவியாளர்கள் யாருமில்லை
அவரே எல்லா இடங்களுக்கும்
வர வேண்டி இருக்கிறது
ஆனாலும் அவர் வருகிறார்

நீதியின் மீது பசிதாகமுடையோருக்கு
இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்
வெகு காலம் பற்கடிப்பில் உள்ளோர்
இன்னும் கொஞ்சம் கடிக்கட்டும்
கர்த்தாதி கர்த்தர் வருகிறார்
இன்னும் கொஞ்சம் எரிகணைகள் வீழட்டும்
இன்னும் கொஞ்சம் ஓலங்கள் கூடட்டும்
கர்த்தர் வருகிறார்

பயப்படாதே சிறு மந்தையே!
கர்த்தர் on the way.

Comments

சமூகத்தின் மீதான விமர்சனத்தை காட்டமாக சொல்லி உள்ளீர்கள்.. நன்றாக இருக்கிறது நண்பா..
word verification எடுத்து விட்டால் கமென்ட் பண்ண வசதியாக இருக்கும் இசை..
உங்க பகடிய ரசித்தேன் நண்பா, அருமையான கவிதை

//உங்கள் அன்பில்
நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம்
உங்கள் காதலியை
புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம்
கர்த்தர் வருகிறார்//

:)

அருமை
கலக்குங்க இசை. ‘கர்த்தர் வருவார் நிச்சயமாக’பிரளயத்தின் முடிவில் தன்னந்தனியனாக நின்று கதற. இணையத்திலும் ‘இசை’பரவட்டும். வாழ்த்துக்கள். மற்றது, நீங்கள் பதிவு போடும்போது தலைப்பை தனியாகப் போடுங்கள். அதற்கு மேலே title என்றொரு பகுதி இருக்கிறது பாருங்கள். அதற்குள் போடுங்கள். அப்போதுதான் தலைப்பு மட்டும் வலது பக்கத்தில் தெரியும். கவிதை உள்ளீடாக இருக்கும். வேறென்ன… எப்போதும் குடித்துவிட்டுத்தான் என்னோடு உரையாட வாய்க்கிறதா உங்களுக்கு?
வடகரை அண்ணாச்சியின் பதிவு வழியே வந்தேன்.

கவிதை அருமை நண்பரே!

Popular posts from this blog

குத்துப்பாடல்களுக்கிடையே ஒரு ஆட்டம்

                                                                                                       நண்பர் செந்தில்   தான் புதிதாக துவங்க இருக்கிற மின்னிதழுக்காக   பொறுப்பான வேலையொன்றை தந்து செய்துதரச் சொன்னார் . அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை . ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன் . ஆகவே   “ பொறுப்பற்ற வேலையொன்றை “ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன் . அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்ட...

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

கரகரப்பின் மதுரம்

நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா. எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.   ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒ...