Skip to main content

கவிதை







டம்மி இசை



வீட்டிலிருந்து 15 நாட்கள்
விடுப்புவேண்டி இருப்பதால்
அமானுஷ்யத்தின் துணைகொண்டு
ஒரு “டம்மிஇசையை” உருவாக்கினேன்.
அதற்கு என் நடை உடை பாவனைகளை கற்பித்தேன்.
ஒரு அலைபேசியை கையளித்தேன்.
மனமுருக அதன் கரங்களைப் பற்றுதலால்
நன்றி பகன்று விடைபெற்றேன்.
மறுநாளே அழைத்த அது
என் மகனின் வீட்டுப்பாடங்கள்
ரொம்பவும் கடினமாக இருப்பதாக சொன்னது.
நாளுக்கு நாள் அதன் புகார்கள்
அதிகரித்துக் கொண்டே வந்தன.
புதிததாய் தனக்கு மூச்சுமுட்டும் வியாதி கண்டிருப்பதாகவும்
சீக்கிரம் வந்துவிடும் படியும்
அது நச்சரிக்கத்துவங்கியபோது
நானதனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்.
அமானுஷ்யக்காரரிடம் சொல்லி விடுவதாக மிரட்டினேன்.
பிறகு அதன் அழைப்புகள் நின்று விட்டன.
விடுமுறையின் ஏகாந்தம் முடியும் கடைசி நாளில்
என் வருகையைத் தெரிவிக்க
நான் அதை அழைக்க ,


ஒரு பெண் குரல் சொன்னது
“நீங்கள் தொடர்புகொள்ளும்
வாடிக்கையாளர்
பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார்”


நன்றி; கல்குதிரை
.

Comments

ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு... நான் ரசிக்கும் இசையின் அருமையான கவிதை..
நடைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் படும்பாட்டை மிக யதார்த்தமாக கவிதையாக... வாழ்த்துகள் சகோ...
Thendral said…
Can't replace original Isai 😇. Literally laughed out loud

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

பேய் பங்களா

வ சந்த மாளிகை என்பது காதலன் காதலிக்கோ காதலி காதலனுக்கோ கட்டி எழுப்பும் கட்டிடமல்ல காதல்,  மண்ணில் தோன்றுவதில்லை அதன் பிறப்பே வசந்தமாளிகையில்தான் அல்லது காதல் பிறந்த மறுகணமே மாளிகை  வான் அளாவ வளர்ந்துவிடுகிறது எழுப்பப்பட்ட மாளிகைகளில் எந்த மாளிகையும் தரைமட்டமாவதில்லை பூச்சுக்கள் உதிர்கின்றன ஆங்காங்கே புற்றுகள் வளர்கின்றன கோட்டான்கள் அலறுகின்றன எல்லா  இடிபாடுகளுக்கிடையேயும் நினைவுறுப் பேய்கள் அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன வாரத்தில்  ஒரு முறையேனும் நான் என் மாளிகை முன் அமர்ந்து நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன் ஒரு தீபாராதனை போல அந்தப் பேய்கள் வாழ்க என!