Skip to main content

நான் குரங்கு




இரண்டு கவிதைகள்



நான் குரங்கு


நான் குரங்கு.
பானைக்குள் விழுந்து கள் குடிக்கும்குரங்கு.
வாலைக் கண்டு பாம்பென்று பதறும் வழிவந்ததில்லை.
நுனிவாலில் எழுந்து படம் விரிக்கும் பாம்பை
பகடி சொல்லும் குரங்கு.

நான் குரங்கு.
காண்பதையெல்லாம் களவுண்டு தின்றும்
கும்பிக்குள் தடநெருப்பு அடங்காத குரங்கு.

நான் குரங்கு.
நினைவுக் கோளாரால் மதியழிந்த குரங்கு.
எல்லா மரத்திற்கும் தாவி
எல்லா கிளைகளையும் உலுக்கி
எல்லா இலைகளையும் உதிர்த்து விட்ட பின்னும்
நினைவடங்கா பெருவெறியில்
மண்ணைக்கீறி வேரைக் கடிக்கும் மூடக்குரங்கு.

நான் ஒரு குரங்கு.
தீங்கொன் றறியாத அப்பாவிக் குரங்கு.
ஒடிந்த கிளைகளை ஆட்டிப்பார்க்கும்,
னைந்த கனிகளை முகர்ந்து பார்க்கும்,
உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு போய்
மரத்திலேயே ஒட்டப்பார்க்கும் பேதைக் குரங்கு.


நான் ஒரு குரங்கு.
அடிக்கடி ஆப்பில் அகப்பட்டுழலும் அழுமூஞ்சிக்குரங்கு.
மருந்தில்லாக் கொடுநோயால் தாக்குண்ட குரங்கு.

நான் ஒரு குரங்கு.
கரணமிட்டு கையேந்தும் குரங்கு.
மலத்தினும் புழுத்த யாரினும் கடைய இழிக்குரங்கு.

ஆனாலும் நான் குரங்கு.

பானைக்குள் விழுந்து கள்குடிக்கும் குரங்கு.
படம் விரிக்கும் பாம்பை பகடி சொல்லும் குரங்கு.
பெருவெறி மூளும் கடுவளிக்குரங்கு.
ஊழியை வாலில் கட்டி இழுத்து வரும் குரங்கு.
தென் இலங்கை தீக்குரங்கு.
பதின்மதக்களிறு ஓருடலின் உள்ளே புகுந்திட்ட குரங்கு.
நான் குரங்கு...


.....



அறவுணர்ச்சி என்னும் ஞாயிற்றுக் கிழமை ஆடு


அறவுணர்ச்சி
என் கசாப்புக்கடையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்
ஒரு ஞாயிற்றுக் கிழமை ஆடு.
அதை நிலத்தில் கிடத்தி அமுக்குகையில்
அது தெரிந்து கொண்டு
ஓலமாய் ஓலமிடும்.
அப்போது நான் ஒரு செவிடன்.
ஒரு கூரான கத்தியால்
அதன் கழுத்தில் ஒரு கோடு கிழிக்க,
பொல பொலவென பொங்கி வரும் ரத்தம்.
நல்ல விலை பெறும் என்பதால்
அதைப் பிடித்து வைக்க
ஒரு அகன்ற பாத்திரம் உண்டு என்னிடம்.
உரித்துதெடுத்து உப்பிட்டு வைப்பேன்
அதன் தோலை.
கால்களை சூப்பிற்காய்
நறுக்கிடுவேன்.
நான் முதன்முதலாக ஒரு ஆட்டை வெட்டியபோது
அது குதிரையைப் போல கனைத்தபடி
கால்களைத் தூக்கிக் கொண்டு
என் கனவில் வந்தது.
நான் தலையணைக்கடியில்
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து
அதைக் கனவில் ஒரு போடு போட்டேன்.
மகாகொடூரனின் முன்னால்
நீதிகேட்டுப் போவது மடமையென்று
தன் இனத்திற்குஅறிவித்து விட்டு
அது மடிந்துபோனது.
அன்றிலிருந்து கேள்வியற்று மடிந்து கொண்டிருக்கின்றன ஆடுகள்.
ஆனால் நண்பர்களே,
ஒரு நீதிமான் முதல் ஆட்டை வெட்டும் போது
தயவு செய்து நீங்கள் அவனை
காணாதது போல் நடந்து கொள்ளுங்கள்.

Comments

எப்படித்தான் இப்படில்லாம் முடியுதோ!!

கலக்கல் நண்பா.
I saw similar monkey poem in vadakarai velan blog also
palanivelbavya said…
நல்லாருக்கு.. ! வாழ்த்துக்கள்..!!
எளிய உரை இட்ட வார்த்தைகளின் தொகுப்பு உள்ளார்ந்து யோசிக்க வைக்கிறது .........நல்ல நடை ......அழகு

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான