
உப்புபுளிமிளகாய் மறுக்கப்படுவதாக
தீர்ப்பு சொன்ன நாளில்
அவன் கவிச்செருக்கில் ஓங்கரித்தான்.
தான் உப்பென்றெழுத உப்பாகும் என்று கூவினான்.
ஆனால் அப்படியெதுவும் ஆகவில்லை.
நான் ஒரு மோசமான கவியா என்று
வானத்தை நோக்கிக் கத்தினான்.
உடைந்து உடைந்து அழுதான்.
உப்புபுளிமிளகாய், உப்புபுளிமிள்காய் என்று
உளறி உளறி பித்தானான்
காடுகரைகளில், தோட்டவயல்களில், வீட்டுச்சுவர்களில்,வனத்து மரங்களில்
கோவில்பிரகாரங்களில், நடைபாதைவழிகளில்,
ஆற்றில், குளத்தில்
ஊருணி நீரில்
எங்கும் எப்போதும்
ஒரு கிறுக்கு ஓவியனைப் போல
உப்புபுளிமிளகாய் என்று எழுதிக்கொண்டிருந்தான்.
கடைசியில் கலைவாணி கண் திறந்தாள்.
அவன் உப்பென்றெழுதியததெல்லாம் உப்பாகி
ஊர் உப்புபுளிமிளகாய்க்குள் மூழ்கியது.
...
அவன் பித்தாகி அலைந்த காலங்களில்
எழுதிய 400 பாடல்கள்
கி.பி.6 ம் நூற்றாண்டில் பூவூர்கிழார் என்பவரால்
"அறநானூறு" என்கிற பெயரில்
தொகுக்கப்பட்டது.
கவிஞரின் பெயர் பற்றிய குழப்பங்கள் நிலவியதால்
எழுதியவர் பெயர்
"உப்புபுளிமிளகாயார்" என்றே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
" இதன் தலைப்பை கருதி இதை பதினென்கீழ்கணக்கு நூல்களில்
ஒன்றாக வைத்து எண்ணுதல் தாகாது என்றும்,
இவை ஆழ்ந்தவாசிப்பை கோரும் நுட்பம்மிகுபாடல்கள் என்றும் குறிப்பிடுகிறார் நச்சினார்க்கினியர்.
இக்கவிதைகளின் லய ஒழுங்கும், ஓசைநயமும்
இதைப் படிப்போரின் இருதயதில் ஓயாது ஒலிக்க வைப்பன
என்று புகழ்கிறார் மணிநாப் புலவர்.
அறநானூற்றின் சில பாடல்களை
சித்து வேலை செய்வோர் ரகசியமாக பயன்படுத்தி வந்ததாக
ஒரு கருத்துண்டு.
...
சுப்பிரமணிய பாரதி
தன் கஷ்டகாலங்களில்
உப்புபுளிமிளகாயாரை வேண்டிப் பாடி
உப்புபுளிமிளகாய் பெற்றுக்கொண்டதாக
ஒரு தகவலுண்டு.
ஆனால் பாரதி ஆய்வறிஞ்ர் யாரும்
இதுவரை இத்தகவலை உறுதி செய்யவில்லை.
...
"உப்புபுளிமிளகாயூரை" சேர்ந்த 200 பெண்கள்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்
அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டனர்.
சாலைகளை மறித்துப் போராடினர்.
இதனால் நேற்று கோவை மாநகர் முழுக்க
போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்பட்டது.
...
அறநானூற்றின் பிரதிகள் எதுவும்
தற்போது காணக்கிடைப்பதிலை.
ஆனால் ஹெச்.சி.ரசூல் ஒரு முறை
அறநானூற்றின் பிரதியொன்று
தன்னிடம் இருப்பதாகவும்,
ஆனால் அதை தான் எங்கும் வாங்கவில்லை என்றும்
ஒரு நாள் புத்தக அலமாரியில் இருந்து
அது திடீரென வெளிப்பட்டதாகவும்
மிரட்சியுடன் குறிப்பிட்டார்.
லீனா மணிமேகலை
அறநானூற்றின் சில கவிதைகளை
அவ்வப்போது எனக்கு ஈ மெயிலில் அனுப்புவதுண்டு.
Comments
தன் கஷ்டகாலங்களில்
உப்புபுளிமிளகாயாரை வேண்டிப் பாடி
உப்புபுளிமிளகாய் பெற்றுக்கொண்டதாக
ஒரு தகவலுண்டு.
ஆனால் பாரதி ஆய்வறிஞ்ர் யாரும்
இதுவரை இத்தகவலை உறுதி செய்யவில்லை./////
எனக்கு தமிழ் கற்பித்த தமிழ் ஆசிரியர் ஒருமுறை இதைப் பற்றி எனக்கு சொல்லி இருக்கிறார் . ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே தகவலை வாசிக்கும் இந்த சந்தர்பத்தை ஏற்படுத்திய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி .
________________
என் தளத்திற்கு வரும் முதல் அனானியை வருக வருக என்று வறவேற்கிறேன். என்னா பாஸ்.. நான் எல்லாம் ஒரு ஆளுன்னு எனக்கெல்லாம பயப்படறது.... எல்லாரும் பாத்துக்குங்க நானும் ரவுடி தான்.. நந்தவனதாண்டி பாடல்களுக்கு "மயிர்" என்று பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்..
" மயிர் கெட்ட வார்த்தை இல்லப்பா .. தூய தழிழ் வார்த்தை..".
நன்றி.. மீண்டும் வருக..
கவிஞர்கள் பேச்சு புரியமாட்டேனென்கிறது.