Skip to main content

சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்துவருகின்றன





ஒரு அடைமழை நாளில்
சிட்டுக்குருவியொன்றை சந்தித்தேன்.
தொப்பர நனைந்திருந்த அது
ஒரு மரக்கிளையின் இலைமறைவில் அமர்ந்து நடுநடுங்கிக்கொண்டிருந்தது.
உடைந்த அதன் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருகிற இந்த நாட்களில்
அது எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.
மருண்ட விழிகளோடு
இறகுக்குள் ஒடுங்கி உயிர் பதற அம்ர்ந்திருந்த அது,
ஒருமுறை வலிய பூட்ஸ்காலின் கீழே
சுருண்டு கதறிய நான்தான்.
தானிய மணிகளைக் கொத்திக்கொண்டு
கவண்கற்களுக்கு தப்பிப்பறந்த சாகஸத்தின் பழங்கதையை
அது மறக்கவே விரும்புகிறது.
நிசப்தமான மனிதர்கள் வாழும்
நிசப்தமான உலகில்
கீச்சுமூச்சு கூடாதென்பதை உடைந்த மூக்கு அதற்கு தெரிவித்துவிட்டது
மழை குறைந்து நின்றதும் அது கிளப்பிப்போனது.
அதன் இறக்கைகள் எதிலும் காயங்களில்லை.
கால்கள் எதுவும் முடமாகவில்லை.
என்றாலும் அது மெல்ல மெல்ல நடந்து போனது.
அப்போது
சிட்டுகுருவி என்ற பெயர் அதை விட்டுவிட்டு
பறந்துபோனது.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...