Skip to main content

தூரன் குணா கவிதை

மிருகத்தின் ஆன்மாவை மேவுதல்

நான்
குறைந்தபட்சம் ஒரு மனிதன்
பழுப்பு வண்ணத்தை அடைந்துவிட்ட
என் கண்கள்
இந்த உலகின்
புராதன நீதிகளை தொழுகிறது
ஆனால் அதன் நீரடியில்
வெளியே கேட்காமலே அடங்குவது
ஒரு கலகக்குரல்…
நான் தொழும் தெய்வத்திற்கோ
இந்த உலகின் சம நிலையை
காக்க வேண்டிய கடமையிருக்கிறது
தெய்வத்திற்கும் எனக்குமான சமர்
ஒரு இருதயத்தின் தசை அளவைக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
அப்போது எனது
கண்ணீர்த்துளிகள் விலையுயர்ந்தவை….
தெய்வம் பிதற்றும் நீதியை
முழுக்கவும் கண்ணீர்த் துளிகள் மறுக்கின்றன
தெய்வங்கள் சிலைக்குள்
வசிக்காத காலத்தில்
தெய்வத்திற்கு எதிரான சங்கீதம்
ஒலிக்கிறது
அப்போது ஒரு மிருகம்
தெய்வத்தின் ஆன்மாவை மேவுகிறது
நான்
மிருகத்தின் ஆன்மாவை மேவுகிறேன்
அக்கணம் வரலாற்றில் தட்டையாகவிருந்தது
எனபது கடந்தகாலம்.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...