
இன்று அதிகாலை பீக்காட்டுக்கு போனபோது
ஒரு டாங்கியைப் பார்த்தேன்.
ஆமாம் அதன் பெயர் டாங்கி தான்
பீரங்கி அல்ல.
பச்சை இலையும் காயந்த சருகும்
சேர்ந்திருக்கும் உடுப்பில்
அதில் இருவர் அமர்ந்திருந்தனர்.
இலங்கையில் போர் நடப்பது எனக்கு தெரியும்.
டி.வி யில் காட்டுகிறார்கள்.
இந்தக் காட்டை மறைத்து நிற்கும் கொட்டாயில்
நான் நிறைய சண்டைகளைப் பார்த்திருக்கிறேன்.
கடைசி சீனில் "டுமீல்" "டுமீல்" என்று
துப்பாக்கிகள் வெடித்திருக்கின்றன.
எதையோ வாயில் கடித்துத் துப்பிவிட்டு
குண்டுகளை வீசுவார்கள்.
நிலம் பிளந்து மண் எழும்பும்.
ஒரு மனிதன் அந்தரத்தில் வெடித்து சிதறுகையில்
நாங்கள் சீக்கி அடித்திருக்கிறோம்.
அந்த கொட்டாய்க்கு பின்னால் தான்
இன்று நீட்டிய குழலோடு ஒரு டாங்கி நிற்கிறது.
எனக்கு தெரியும்
சினிமாவில் எல்லாமே டூப்பு தான்.
ஆனால், நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காட்டுக்குளிருந்து
ஒரு டாங்கி உருண்டு வருவதென்றால்
இது கனவு தானே நண்பர்களே....
கனவு தானே..
கனவு தான்.
ஒரு வேட்டு போட்டால் ஓடி விடாதா இந்த வன விலங்கு.
ஆனால் இது கனவு தானே?
கனவு தானே..
நண்பர்களே இது கனவு தானே..
கனவு தான்.
ஆறுமுகம் எதிரே வருகிறானே..?
பேடிப்பயலே.. அவன் கனவில் வருகிறான்..
ஆமாம்..இது கனவு தான்.. கனவு தான்..
கணவன் தூர்கனவில் உழல்கையில்
மல்லாந்து கிடக்கிற பதிவிரதை....!
என்னை எழுப்படி நாயே...
கனவு ... இது கனவு.. கனவு தான்
அம்மா தாளிக்கும் மணம் வருகிறது.
பாதகமில்லை... கனவு தான்
இது கனவுதானே அம்மா...
அம்மா! இது கனவு தானே..
அடுப்படியில் என்ன புடுங்குகிறாய்
சீக்கிரம் வந்திந்த அறைக்கதவை உடை..
லேசாக பீ வாடை வருகிறதா..?
இல்லையில்லை.
இது கனவு தான்..
அய்யோ..
இது கனவு தான்
Comments