Skip to main content

குட்டிச் செம்பொன்

சுவரைத் தாண்டாத தாழ்ந்த குரலில்
உருக்கொள்கிறது ஒரு சச்சரவு
அந்த வீட்டின் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏசிக்கொள்கிறார்கள்
வஞ்சினம் சொல்கிறார்கள்
அப்பா காலைத் தூக்கிக்கொண்டு அம்மாவை உதைக்க போகிறார்
அம்மா ஒரு சொல்லை பழுக்ககாய்ச்சி அப்பாவின் நெஞ்சில் வைத்து தேய்கிறார்
அம்மா நெஞ்செங்கும் அழ, அப்பா கண்களுக்குள் அழுகிறார்
அப்பா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்விற்குள் அம்மா மூத்திரம் மொண்டு வைக்கிறாள்
அம்மா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்வை
அப்பா எண்ணெய்ச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடிக்கிறார்
நமக்கு தெரியும்
இரண்டு வயதே நிரம்பிய ஒரு குழந்தைக்கு என்ன தெரியுமென்று
நான் பேசுவதெதுவும் அதற்கு புரியாது
அதனால் பேசவும் முடியாது
இரண்டு முகங்களையும் மாறி மாறி பார்க்கும் அது
ஐந்தாம் வீட்டின் சுவரை முட்டிக்கொண்டு அழுகிறது
பொன்னான வாழ்வில் பூத்த குட்டிச் செம்பொன்
அநியாயத்திற்கு வளர்ந்து விட்டது

Comments

வார்த்தைகளும், மூத்திரமும், வெப்பமும் இல்லாத கனவை கானும் அந்த குட்டிச்செம்பொன் துரதிஷ்டசாலி.. ஆனாலும் அதற்கு உலகம் முழுவதும் ரத்த உறவுகள்.

விஷ்ணுபுரம் சரவணன்
வார்த்தைகளும், மூத்திரமும், வெப்பமும் இல்லாத கனவை கானும் அந்த குட்டிச்செம்பொன் துரதிஷ்டசாலி.. ஆனாலும் அதற்கு உலகம் முழுவதும் ரத்த உறவுகள்.
rvelkannan said…
நல்லாயிருக்கு நண்பரே
//ஆனாலும் அதற்கு உலகம் முழுவதும் ரத்த உறவுகள்.//
உலகம் முழுவதும் செம்பொன்.

Popular posts from this blog

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை