Skip to main content

குடும்ப நாய் ; சில சித்திரங்கள்

1. ஒரு குடும்ப நாய்
குடும்பத்தைத் தின்று
குடும்பத்தை பேண்டு
அதையே தின்று
அதையே பேழ்வது.







2. உண்மையில் குடும்பநாய்களுக்கு
சங்கிலியோ கயிரோ தேவையில்லை.

3 . குடும்ப நாய்களை நாம் பரிசோதிக்க வேண்டியதில்லை.
அவை சிச்சயம் நல்ல சாதி நாய்கள்


4 உலைத்து உலைத்து ஓடாய் தேய்பவை
குடும்ப நாய்கள்.
பெரும்பாலும் அதன் உலைப்பு காற்றில் போய்விடுகிறது.

5. குடும்ப நாய்கள்
சமயங்களில்
திருட்டு பூனைகள்.

6. குடும்ப நாய்களுக்கு
விசாலமான வீடுகள் உண்டு.
என்றாலும்
அவை அசுத்தமான விடுதிகளிலேயே
சுத்தமான காற்று கிடைப்பதாக சொல்கின்றன.
எனவே சில நேரங்களில்
சொந்த ஊரிலேயே அறை எடுத்து தங்குகின்றன.

7. குடும்ப நாய்களிலும்
பெட்டைகள் இன்னும் பாவம்
அவை பாத்ரூம்களில்
மட்டும் நடனமாட அனுமதிக்க பட்டவை

8. குடும்ப நாயின் கர்ப்பக்குட்டிகளின்
வயிற்றில் வளர்ந்து வருகிறது
சலாமிடுதல் என்கிற பட்டறிவு.



9. குடும்ப நாய்கள் ரொம்பவும் மனசாட்சிக்கு பயந்தவை.
எனவே
எல்லா அநீதிகளுக்கெதிராகவும்
அவை இரண்டு முறை குரைத்து விடுகின்றன.



10. ஒரு குடும்ப நாய்
தன் வாழ்வில் ஒரு முறையேனும்
தண்டவாளத்தை உற்றுப் பார்க்கிறது.


11 . சில குடும்ப நாய்கள்
உத்தரத்தில் தொங்கி
கவரி மான்கள் ஆகின்றன

Comments

சிரிக்காமல் படிக்கமுடிந்தால், அது சாதனைதான்.கலக்கல் நண்பா.
இப்படிக்கு
-ஒரு குடும்ப நாய்
துல்லியமான கண்ணாடி போல இந்த கவிதை.ஒரு குடும்பத்தின் அத்தனை சுவர்களையும் அதன் கீறல்களோடும், சதுர திரும்பல்களோடும் அப்பட்டமாகப் பார்க்க முடிந்தது. கூடவே முகத்தையும். இவ்வளவு உண்மையான கவிதையாவென விதிர்விதிர்ப்பாகவும் இருந்தது.எழுத்தின் வன்மைக்குப் பாராட்டுக்கள்.

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?