Skip to main content

மன்னவன் வந்தானடி தோழி !





சென்ற மாத்தின் ஒரு நள்ளிரவில்
நாச்சிமுத்து கொலைகாரனானார்.
நம்மை போல் தான் அவரும்.
கொலைசெய்வது பற்றியெல்லாம் நினைத்து கூட பார்த்தவரில்லை.
ஆனால் நம்மைபோலில்லை நாச்சிமுத்து
அவர் ஒரு கொலை செய்தார்.
“ நடிப்பிசை கதைக்கடலான” அவரைக் கொண்டு போய்
சிறையின் கும்மிருட்டுள் வீசினார்கள்.
அங்கு பத்மினியின்றி அவர் தனிமையில் வாடினார்.
திருட்டுத்தனமாக பாட்டு கேட்ட குற்றத்திற்காக
இரண்டு முறை பிடரியில் உதை வாங்கினார்.
மெய்மறந்து பாடிய சத்தத்தில் முன்பல் போனது.
அனேக இரவுகளில் அவர் அழுதுகொண்டிருந்தார்.
இன்று அதிகாலை கடன் கழிக்க கழிவறை சென்ற நாச்சிமுத்துவுக்கு
வெளியே வருகையில் ஒரு அம்சமான மீசை இருந்தது.
மார்பெங்கும் இரத்தினங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
தலையில் ராஜகீரிடம்...
அப்போது யாரோ இருவர் கொம்பூதி முழக்கினர்.
பொற்சரிகை பூண்ட அரையாடை துவள
அவர் நடந்து வருகையில்
பிண்ணனியில் ஒலித்தன ஜதியும் பாட்டும்.
தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த மன்னவன்
வரும் வழியெங்கும் கைகூப்பி எழுந்து நின்ற மரங்களை
கை அமர்த்தி அமரச் சொன்னார்.
அவை அமர்ந்து கொண்டன.

Comments

இசை. வழக்கம்போலவே அசத்திட்ட.
jalli said…
இந்தகவிதை என்னை மிகவும் பாதித்தது மறுபடியும் மறுபடியும் படிக்க தூண்டும் புதிய யுக்தி. வியப்பை தருகிறது. குறிஈடு , படிமம் , பின் நவீனுத்துவம் , மேஜி கல் ரியலிசம் , எல்லாம் தாண்டிய வடிவம் நாச்சிமுத்து .( வால்பாறையில் ஒருதடவை '' கவிதை கூட்டத்தில் உங்களை சந்தித்து உள்ளேன் ).

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?