Skip to main content

எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழி


ஒரு பொட்டு தெரித்தாலே
உடல் கொப்புளமாய் பொந்திப் போகையில்
எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழியில்
மனிதர்கள் ஏன் இப்படி நெருக்கியடித்து நிற்கிறார்கள்
ஒருவரை ஒருவர் முந்தவும் பார்க்கிறார்கள்
 நன்மார்க்கத்தின் வழியில்
 காற்று விளையாடிக் கொண்டிருக்கிறது.
அங்கு ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் ஒரு சிலரும்
ஏன் இங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
தவிரவும்,  அடிக்கடி ஏன் அவர்கள் சலவாய் வடிக்கிறார்கள்.
வாணியிடம் ஆசிபெற்ற கையோடு
உற்சாகமாய் வந்து
இந்த நெரிசலில் கலக்கிறான் ஒரு கவி.
அவன் தொப்பி எதுவும் அணிந்திருக்கவில்லை
மேலும்
அனைவரையும் தொப்பியைக் கழற்றிவிடும் படியும்
கேட்டுக் கொள்கிறான்.
எட்டுமுழ வேட்டியை தலைக்கு போர்த்தியிருக்கும்
சிவனாண்டியைப் பார்கையில்
நமக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.
உளுந்துவடைகள்
எண்ணெய்க் கொதிக்கு மருளுமோ தாயே ?

Comments

எண்ணெய்க் கொப்பரை அது என்று சொன்னால், 'பொறாமை'என்பார்கள். மேலும், அப்படிச் சொல்வதற்கு நமக்கு உரிமையும் இல்லையே இசை. அவரவர் அனுபவமும் அவரவர் கவிதையாக நினைப்பதும் அவரவர்க்கே.

தொப்பியும் வேட்டியும் யாருடையவை என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்:)))

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை