Skip to main content

நம் அறவுணர்ச்சிக்கு ஒரே குஷி

              



நம் அறவுணர்வு ஒரு அப்புராணி
நாம் வரைந்து வைத்திருப்பது போல்
அதற்கு புஜபலமில்லை.

நம் அறவுணர்வு ஒரு மெல்லிய பூனைக்குட்டி
ஒரு துண்டுமீனின் வாசனைக்கு
அது  கூப்பிடும் இடத்திற்கு வருகிறது.

நாம் ஒருவரையொருவர்
அடித்துத் தின்கையில்
அது மாரடித்துக் கதறியது
நாம் அதன் முன்னே
வலுத்தது வாழும்
என்கிற நியதியை முன்வைத்தோம்.
னாவிற்கு  ”னா சரியாக இருப்பதால்
அதை ஏற்றுக்கொள்ளும் படியாகிவிட்டது அதற்கு.

நாம்வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிக்கான
வரிசையில் நிற்கையில்
அது வெகுண்டெழுந்து சீரியது.
நாம் அதை
உட்கார வைத்துப் பேசினோம்
பிறகு அதுவே தான்
சும்மாடு தூக்கி
வீடு வீடாக இறக்கியது.

பதினோரு மணிக்காட்சிக்குப் போவதில்
நம் அறவுணர்வுக்கு சிக்கலொன்றுமில்லை.
ஆனால்
வெள்ளைப்பொடி கலந்து தரப்பட்ட குளிர்பானத்தைப் அருந்தி
அப்பாவிப்பெண்ணொருத்தி மயங்கிச் சரிகையில்
அது எழுந்து கொண்டு
போய்விடலாம்”… ”போய்விடலாம்
என்று நச்சரித்தது.
அப்போது அதன் காதில் நுட்பமான நீதியொன்று கிசுகிசுக்கப்பட்டது.
அதைக் கேட்டதும் அதற்கு குஷி பிறந்து விட்டது.
அதற்குள் மேலாடையும் கழற்றப்பட்டு விட்டது.

 அறவுணர்வை கைதொழ வேண்டி
 பழக்கதோஷத்தில்
 நாம் அண்ணாந்து நோக்குகையில்
 அது நம் காலடியில் நின்று கொண்டு
தொடையைச் சொரிகிறது.



          நன்றி ;  காலச்சுவடு – ஆகஸ்ட் -2014

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம