உள்ளத்தைத் திறந்து வைத்தால் கெட்ட நாற்றம் எழுகிறது
உலகம் மூக்கைப் பிடித்துக் கொள்ளும்படி
பிறகு அது முடைநாற்றம் கொள்கிறது
நட்சத்திரங்கள் என் கேட்டில் மங்கிவிடுகின்றன.
ஆற்றுமீன்கள் எவ்வளவு ஆழத்தில் ஒளியமுடியுமோ அவ்வளவு ஆழத்தில் ஒளிந்து கொள்கின்றன.
பூனை தன் "ம்யாவை" நிறுத்திக் கொள்கிறது.
எங்கெங்கு காணினும் நான்.
அவசரவசரமாக உள்ளத்தை அள்ளி ஒரு கோணிப் பையுள் திணித்துக் கட்டினேன்.
நீண்டதொரு பெருமூச்சிற்குப் பிறகு
ஒரு செல்ஃபி எடுத்தால் தேவலாம் என்றிருந்தது.
அதில் நான் சிரிக்கிறேன் பளீர் பற்களோடு.
இனிமை ததும்ப
நலமே சூழ.
நன்றி : காலச்சுவடு - ஜுன்-19
Comments