Skip to main content

தனி


உன் கற்பனைக்கு
அத்தனை சிறகுகள்
எங்கிருந்தென்று தெரியாமல்
சீறி வருகிறதோர் அம்பு
நீ துடிதுடித்து
தாழ்வெண்ணத்தில் விழுகிறாய்
பறத்தலின் குதூகலத்திலிருந்து
இருத்தலின் நிம்மதிக்குத் திரும்புகிறாய்

தாழ்வெண்ணத்தில் விழுவது என்பது
கிராமத்திற்குத் திரும்புவது..
அதனுள்ளே ஒரு ஒற்றையடிப்பாதைக்கு..
அதுவழியே ஒரு காட்டுக் கோயிலுக்கு..
அதன் மட்ட மதியத்திற்கு..
அந்த வேலி ஓணானுக்கு

பரவசமும் பதட்டமும் அருகருகே இருப்பது
இரண்டிற்கும் அப்பால்
வெகு தொலைவில் இருக்கிறது
ஒரு சின்னஞ்சிறு குடிசை.
அதில் சமையல் ஆகிறது
மண் சட்டியில்.
உலை கொதிக்கும் வரைக்கும்
பக்கத்து வேம்பின் நிழலில்
மல்லாந்து படுத்திருக்கிறது
உன் தாழ்வெண்ணம்.
அதன் ஏகாந்தம் தனி.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை