நூறு இளைஞர்கள் தன் பின்னால் ஓடி வரும் கனவொன்று அடிக்கடி வரும். அவளைக் கிறங்கடிக்கும் கனவது. யவனத்தின் மதர்ப்பில் செழித்திருந்த காலத்தே மூக்கு நுனியில் விழுந்தது முதல் வெண் பொட்டு. பிறகது தீயைப் போல உடலெங்கும் பரவியது. இளைஞர்களைப் போன்றே நாய்களையும் பிடிக்கும் அவளுக்கு. "நாய்களோடு வாழ்ந்து கொள்கிறேன்" என்றவள் துள்ளி எழுந்த போது நச்சரவமொன்று அவள் படுக்கையிலிருந்து இறங்கி கொல்லை வழியே சென்று மறைந்தது. ஒரு குட்டி நாயை ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு இரண்டு செவலைகள் பின்னே ஓடி வர நகர் வலம் வருகிறாள். அது ஒரு தேரோட்டம். ஏதேனும் ஒன்று தன் பின்னே ஓடி வந்து கொண்டிருக்கும் வரை அவள்தான் இளவரசி. |
Comments