எப்போதும் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு என் நாயிற்கு எறிவேன் அரை பிஸ்கட்டிற்கு முழு உடலால் நன்றி செலுத்தும் பிராணி அது இரண்டு முறைகள் அந்த நன்றியைக் கண்டு களிப்பேன் இரு முறையும் அது என்னைப் போற்றிப் பாடும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை அவ்வளவு ஏக்கத்தோடு பார்த்துக் குழையும் இரண்டாம் துண்டு என் இஷ்டம் இரண்டு துண்டுகளுக்கிடையே அதன் நெஞ்சம் அப்படிக் கிடந்து தவிக்கும் உச்சியில் இருக்கும் எதுவோ இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் என் பிஸ்கட்டை ஆயிரம் துண்டுகள் ஆக்கி வைத்தது. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments