சைக்கிள் சறுக்கி தரையில் விழுந்துவிட்டாள் சின்னஞ்சிறுமி. முதல் காயம் முதல் குருதி வீறிட்டு வீறிட்டுக் கதறுகிறாள் மருத்துவத்திற்கு ஒத்துழைக்க வைக்க மூன்றுபேர் சேர்ந்து போராட வேண்டியிருந்தது. காயத்தைத் துடைத்து மருந்திட்டுக் கட்டினேன் அழுகை தேய்ந்து முனகலான போது கட்டுத் துணியைப் பார்த்து ஏனோ "கொக்கு போல் இருக்கு" என்றாள் அப்போதே அந்தக் காயம் எழுந்து பறந்து போவதைக் கண்டேன். |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments