நீ மட்டும் நடனிப்பதை நிறுத்திவிட்டால் யாவும் நின்றுவிடும். ஆந்தைக்குத் துணையாக மொட்டை மாடியில் திரிய மாட்டேன். துருவேறிய பழந்தகரக் குரலால் பாட்டெடுக்கத் துணிய மாட்டேன் ஓய்வில் இருக்கும் சொற்களை கசையடியால் துன்புறுத்தி கவிதையில் கட்டி இழுக்க மாட்டேன். மகளின் பிறந்த நாளை மறந்துவிட்டு அவளை கண்ணீர் வடிக்க விட மாட்டேன் நீதிநூல் குவியல் மீது செருப்புக் காலால் நடக்க மாட்டேன் நாவே அஞ்சி நடுநடுங்கும் பொய்களை ஒரு போதும் சொல்ல மாட்டேன் அடீ ! பேச்சைப் பாடாதே! பேச்சில் ஆடாதே! நடனம் ஒரு பொல்லாத தீங்கு ஆயினும் நீ அதனை நிறுத்தாதே! |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments