புதிய பணியிடத்தில் பெயரறியாத மலர் ஒன்றைக் கண்டேன். அதை " அலரி"என்று சொன்னார்கள். கண்களைப் பிடுங்காத வண்ணம் யாரையும் அழைக்காத ஒரு அழகு ஏழு ஊரில் எந்த ஊரிலும் மணக்காதது ஆயினும் சுகந்தி எதையுமே நிறைக்காமல் இருந்து கொண்டே இருக்கும் மிதம் அடிக்கடி தலையை பாறாங்கல்லில் முட்டிக் கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையான நான் இப்பொழுது அந்த மலரை தொட்டுக் கொண்டு நிற்கிறேன் அவ்வளவு வாஞ்சையூற நொதி நொதிக்கும் பொறாமையோடு. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments