நான் அவளைக் கண்ட பொழுது அவள் எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள். புதிதாக ஒன்றை அறிந்து கொள்வதன் மூலம் புதிதாக வந்து சேர்வதற்கென்று அவள் அழகில் துளி இடம் கூட இல்லை. ஆனால் போனால் போகிறதென்று அவள் வாசித்துக் கொண்டிருந்தாள். என் சட்டைக்காலரைப் பிடித்து இழுத்தது அவள் தாழ்குழல். பின்னங்கழுத்தின் பிசிறுகளை சீராக்கி அதை ஒருமுறை வாரிச்சுருட்டி அவள் தோளில் இட வேண்டும் என்றொரு ஆசை பூத்தது. இந்த எளிய சேவைக்கும் இன்னொருவன் குதிரை மீதேறி வர வேண்டும் என்கிற உண்மை என்னை துக்கத்துள் தள்ளுகிறது. |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments