இந்த நாளிற்காகத்தான் பூமிக்கே வந்தது போல எவ்வளவு நன்றிகள் இன்று! ஏழு வருடங்களாக பால் ஊற்றிவிட்டு வெறுங்கையோடு திரும்பும் பாட்டிக்கு இன்று முதன்முதலாக நன்றி சொன்னேன் உணவு விடுதியின் பரிசாரகருக்கு பில் தொகையில் பாதியை அன்பளிப்பாக அளித்தேன். கூடவே ஒரு நன்றியையும். பொய்யான காரணத்தோடு விடுப்பிற்கு விண்ணப்பித்த எனது பணியாளிற்கு விடுப்பையும் நன்றியையும் சேர்த்து வழங்கினேன். தென்னங்கீற்றுள் ஒளிந்துள்ள குயிலே! தென்னங்கீற்றே! உங்களுக்கு என் நன்றி! இவருக்கும் அவருக்கும் எவரென்றே தெரியாத எல்லோர்க்கும் நன்றி! நன்றி!! உயிருள்ளவை, உயிரற்றவை என்று சொல்லப்படுவனவற்றுள் காணக்கிடைக்கும் உயிர்த்தன்மை ஒவ்வொன்றுக்கும் நன்றி! இந்தப் பாழும் உடலில் இவ்வளவு நன்றிகள் இத்தனை காலமும் எங்குதான் இருந்தன! அய்யோ..! என் கும்மிருட்டின் பயங்கரத்துள் அவை எப்படி எப்படித்தான் அழுகித் தவித்தன! நன்றி! நன்றி! நன்றி! நன்றி ஒரு போதும் செலவளிக்கவே இயலாத ஒன்று அது தரத்தரவே திரும்பி விடுவதைக் காண்கிறேன். |
Comments