இன்று உன் வீதி வழியே நான் வந்து கொண்டிருப்பது உன்னைக் காண்பதற்கல்ல அந்தப் பச்சைப் பொட்டைப் பார்ப்பதற்காக குழலிலிருந்து விழுந்த அருவியைக் காண்பதற்காக வாடி உதிர்ந்து விட்ட மல்லிப்பூவை வாடா மல்லியாக்கி செடிகளில் சூட்டுவதற்காக முடி கொட்டி, அழுக்கூறிய சொறி நாய்க் குட்டியை செல்லம் கொஞ்சுவதற்காக தொடவே இல்லையே என்பது போல் தொட்டுக் கொண்ட ஒரு கணத்தை இன்னொரு முறை தொட்டுப் பார்ப்பதற்காக உடுத்தாமல் அள்ளிப் போர்த்திய சேலையிலிருந்து கேட்குமே ஒரு கேலிச் சிரிப்பு அதைத் திரும்பவும் ஒரு முறை கேட்பதற்காக "உனக்கொன்றும் குறை இல்லையே?" என்று "அதிர்ஷ்ட விநாயக"ரை நலம் விசாரிப்பதற்காக எல்லா வாகனங்களுக்கும் வழி விட்டு வழி விட்டு காரை கட்டை வண்டி ஆக்குவதற்காக "எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்க" என்பது போல் ஒவ்வொரு பாதசாரியையும் ஆசிர்வதிப்பதற்காக இத்தனைக்கும் குறுக்கே தயவு செய்து நீ வந்து விடாதே |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments