இன்று உன் வீதி வழியே நான் வந்து கொண்டிருப்பது உன்னைக் காண்பதற்கல்ல அந்தப் பச்சைப் பொட்டைப் பார்ப்பதற்காக குழலிலிருந்து விழுந்த அருவியைக் காண்பதற்காக வாடி உதிர்ந்து விட்ட மல்லிப்பூவை வாடா மல்லியாக்கி செடிகளில் சூட்டுவதற்காக முடி கொட்டி, அழுக்கூறிய சொறி நாய்க் குட்டியை செல்லம் கொஞ்சுவதற்காக தொடவே இல்லையே என்பது போல் தொட்டுக் கொண்ட ஒரு கணத்தை இன்னொரு முறை தொட்டுப் பார்ப்பதற்காக உடுத்தாமல் அள்ளிப் போர்த்திய சேலையிலிருந்து கேட்குமே ஒரு கேலிச் சிரிப்பு அதைத் திரும்பவும் ஒரு முறை கேட்பதற்காக "உனக்கொன்றும் குறை இல்லையே?" என்று "அதிர்ஷ்ட விநாயக"ரை நலம் விசாரிப்பதற்காக எல்லா வாகனங்களுக்கும் வழி விட்டு வழி விட்டு காரை கட்டை வண்டி ஆக்குவதற்காக "எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்க" என்பது போல் ஒவ்வொரு பாதசாரியையும் ஆசிர்வதிப்பதற்காக இத்தனைக்கும் குறுக்கே தயவு செய்து நீ வந்து விடாதே |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments