தூர தேசத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகள் வாரம் நான்கு ‘செல்பி” களை அனுப்புவாள் ஒரே முகமெனத் தோன்றினாலும் ஒரே முகமில்லை அதே முகம் போல் தெரிந்தாலும் பழைய முகமில்லை தொட்டிலில் கிடந்தவள் முதன் முதலாகக் கை நீட்டி என் மூக்கைத் தொட்டது போல ஒவ்வொரு படமும் என்னை எங்கெங்கோ தொடுகின்றன இந்த இரவில் அவள் செய்தியைத் திறந்து பார்த்த போது அங்கு அவளுக்குப் பதில் சிரித்துக் கொண்டிருக்கிறது ஒரு அந்தி பார்க்கிறேன்… பார்க்கிறேன்… பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் இதை அப்படி ஒரேயடியாக ‘செல்பி’யில்லை என்று சொல்லிவிட முடியாது. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments