தூர தேசத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகள் வாரம் நான்கு ‘செல்பி” களை அனுப்புவாள் ஒரே முகமெனத் தோன்றினாலும் ஒரே முகமில்லை அதே முகம் போல் தெரிந்தாலும் பழைய முகமில்லை தொட்டிலில் கிடந்தவள் முதன் முதலாகக் கை நீட்டி என் மூக்கைத் தொட்டது போல ஒவ்வொரு படமும் என்னை எங்கெங்கோ தொடுகின்றன இந்த இரவில் அவள் செய்தியைத் திறந்து பார்த்த போது அங்கு அவளுக்குப் பதில் சிரித்துக் கொண்டிருக்கிறது ஒரு அந்தி பார்க்கிறேன்… பார்க்கிறேன்… பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் இதை அப்படி ஒரேயடியாக ‘செல்பி’யில்லை என்று சொல்லிவிட முடியாது. |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments