Skip to main content

கவிதைகள்


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்- 1

அவனிடம் இருந்த துப்பாக்கி
சமயம் பார்த்து வெடிக்காமல் போனது.
அவன் அதை துடைத்து எண்ணையிட்டு
நன்றாகவே பராமரித்து வந்தான்.
இருந்தும் அது வெடிக்கவில்லை.
விசையை அழுத்திப் பார்த்தான்.
தோட்டாக்களை ஆராய்ந்தான்.
எல்லாம் சரியாகவே இருந்தது.
பிறகு அதை ஒரு துப்பாக்கி பழுதுபார்ப்பவனிடம்
கொண்டுபோய் கொடுத்தான்.
அவன் தீர பரிசோதித்துவிட்டு
எல்லாம் சரியாகவே இருக்கிறது
என்று திருப்பிக் கொடுத்தான்.
எல்லாம் சரியாக இருந்தும்
ஒரு துப்பாக்கி ஏன் வெடிக்கமாட்டேன் என்கிறது
என்றிவன் யோசித்த வேளையில்

பெருங்குரலில் ஒரு சிரிப்பொலி கேட்டது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-11


அதை நோக்கி சுட்டபடி
தொடர்ந்து முன்னேருங்கள்
என்றொரு ஆணை பிறந்தது.
சர்வ வல்லமை படைத்த அது

ஏதோ ஒரு மந்திரத்தை முணூமுணுத்தது.
துப்பாக்கிகள் ஒன்றையொன்று சுட்டுக் கொண்டன.

அது தொடர்ந்து முன்னேறியபடி இருக்கிறது.


சித்தாந்தங்களின் துப்பாக்கிகள்-111



அந்த ஊரில் எல்லோரும் அவரை
துப்பாக்கி சாமி என்றே அழைத்தனர்.
அடிக்கடி இரவுகளில் வீறிடும் குழந்தைகளுக்கு
அவர் தன் துப்பாக்கியிலிருந்து தாயத்துகள் செய்து தந்தார்.
ரவைகளை உருக்கி குளுகைகளையும் களிம்புகளையும்
தயாரித்தார்.
அவர் தன் பல்லாயிரம் கரங்களால்
பல்லாயிரம் மக்களின் கண்ணீரைத் துடைத்ததாகச் சொன்னார்கள்.
அவரிடம் எல்லா வினாக்களுக்கும் விடையிருப்பதாகவும்
சகல குழப்பங்களுக்கும் தெளிவிருப்பதாகவும் சொல்லப்பட்டதால்
நான் என் வினாவைத் தூக்கிக் கொண்டு அவரிடம் போனேன்.
அவர் தாள் பணிந்து அதைக் கேட்டேன்.
மறுபடியும் கேட்டேன்.
திரும்பவும் கேட்டேன்.
சாமி சில கேள்விகளுக்கு மட்டும் இப்படி
காது கேளாதது போல் நடிப்பார்
என்று ஏற்கனவே செவியுற்றிருந்ததால்
அவர் காதுக்குள் சென்று கேட்டேன்.
இவனை வெட்டி தோட்டத்தில் புதையுங்கள்
என்று கத்தினார்.



Comments

பூடகமாக சொல்லி இருக்கீங்க.. கொஞ்சமா எனக்குத் தெரிஞ்ச மாதிரி அர்த்தம் பண்ணிக்கிட்டேன் நண்பா..
என்ன சொல்ல ? அருமை.

Popular posts from this blog

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

ஒரு ப்ரவுன்கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா ?

“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில் அவரது தொந்தி நிலத்தில்தேய்ந்து மோசமாக மூச்சுமுட்டியது ஏழாவதுமுறையாக குளியலைறைக்குச் சென்று சல்லடை போட்டார் தன் சகஎழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில் ” பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு அவரது பையையும் பரிசோதித்துவிட்டார். ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு. காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்து அதை கீழே தள்ளி விட்டிருக்கலாம். கண்களைப்பிடுங்கி கீழே வீசி பொறுமையாகத் துழாவினார். பிறகு கண்களை நம்பாமல் அவரே இறங்கிப் போனார். அவர் ஒன்றும் தரித்திர கலைஞர் அல்ல அவரிடம் இப்போது கூட சுளையாக 500 ரூபாய் இருக்கிறது. ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும் இடதுபுற எலாஸ்டிக் பட்டையில் அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக அவருக்கு தெரியாது. நாம் அசட்டை செய்வது போலவோ கிண்டலடிப்பது போலவோ அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை. அவரது இல்லத்து அரசி அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி அனுப்பியிருக்கிறார்.                 ...