Skip to main content

தெய்வாம்சம்


                 
                                               



   
      தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.
 
  வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிமை. தனிமையிலேயே நம்மை நாம் அதிகம் உணர்கிறோம். படத்தில் வாத்தியக் கலப்பற்று ஒலிக்க விடப்பட்டிருக்கும் ராஜாவின் பாடல்கள் நம்மை நம்முள் இழுத்துச் செல்கின்றன.


  கதை பெரும்பாலும் ஓரிரவில் நிகழ்கிறது. காதல் என்கிற தீரவே தீராத ஆதார உணர்வின் மேல் நகர்கிறது. நாம் எவ்வளவு சொன்னாலும் காதலில் விடுபட்டபகுதி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. கலை அந்த விடுபடல்களைத் தொடர்ந்து நிரப்ப முயல்கிறது.பெரிய சிடுக்குகளோ திடீர் திருப்பங்களோ இல்லாத எளிய கதை. எளியதும் சிறியதுமான ஒன்று தன் நுண்ணிய மடிப்புகளாலேயே சுடர் விட முடியும். இப்படைப்பின் ஒளியும் அதுவே. நாயகியின் கணவன் சிகரெட்டால் தொடையில் சூடு வைப்பவனல்ல என்கிற அதிர்ச்சித் தகவலால் நமது மரபார்ந்த சினிமா ரசனைக்கு சப்பென்று ஆகி விடுகிறது. எனவே “ உப்புச் சப்பற்ற “ கதைதான்.  ஆயினும் ஒரு ரசிகன் தன் கண்ணீரால் அவனுக்குத் தேவையான அளவு உப்பிட்டுக் கொள்ளும்படி செய்திருக்கிறார் இயக்குநர். கதையைச் சொல்லி முடித்ததும் “அப்புறம்” என்று சிலர் கேட்கக்கூடும். அப்புறமெல்லாம் ஒன்றுமில்லை... அவ்வளவுதான். இந்த வாழ்வு அவ்வளவுதான் அனுமதிக்கிறது எனவே அவ்வளவுதான்.
 
  ஜானு , தன் வாழ்வில் என்ன நிகழ்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாளோ அதைக் கற்பனையில் ஓட்டிப் பார்க்கிறாள் ஒரு காட்சியில். " இப்படித்தான் ஜானு நாம் என்னவெல்லாமோ நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.ஆனால் என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடக்கிறது ".
  சில திரைப்படங்களில்  நாயகனும், நாயகியும் ஒருவருள் ஒருவர் புகுந்து வெளியேறும் காட்சியில் கூட ரசிகர்கள் தேமேவென்று அமர்ந்திருப்பார்கள். ஜானுவும், ராமும் லேசாகக் கட்டிக் கொள்ளும் காட்சிக்கோ அரங்கு அதிர்கிறது.

           

         






சில விஷயங்களை  உடைத்துப் பார்க்கக் கூடாது. அப்படி உடைத்துப் பார்ப்பதின் வழியே சில உண்மைகள் உங்களுக்குச் சிக்கி விடக்கூடும். ஆனால் அந்த உண்மை கொடுங்கசப்பாக இருக்கும்.  ஏற்கனவே போதுமான  அளவு நெஞ்சுக்குள் கிடக்கிறது. மேலும் கொஞ்சம் கசப்பு எதற்கு? எனவே நான் ராமச்சந்திரனை உடைத்துப் பார்க்க விரும்பவில்லை.அவனை முற்றாக, முழு முற்றாக நம்பவே விரும்புகிறேன். “ இடுப்புப் பகுதி” சக்தி வாய்ந்தது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.ஆனால் அதன் சூறாவளியிலிருந்து ஒருவன் தப்பிப் பிழைத்து விட்டான் என்று நம்புவதிலும் எனக்குச் சிக்கலில்லை.

 படத்தில் இராமாயண காவியத்தின் குறியீடுகள் சில பயன்படுத்தப் பட்டுள்ளன. நாயகன் ராமன். நாயகி ஜானகி.எனில், ராமனின் முதல் எழுத்து “ D  “ அல்லவா ?ஆனால் இதில் “ K. ராமச்சந்திரன் “ என்று குறிப்பிடப்படுகிறது. இவன் தசரத ராமனல்ல.. கோசலை மைந்தன்.. "வசை இல் அய்யன்.."

 தமிழர்கள் இப்படி கும்பலாக குமுறி காலங்கள் ஆகின்றன. எவ்வளவு கலப்படம் மிக்கதாயினும் அழுகை நன்றே. விரைவில் வர இருக்கிற “ சர்க்கார் “ எல்லா அழுகைகளிலிருந்தும் நம்மை விடுவித்தருள்வார்.
 தெய்வங்களை விரட்டியடிப்பதில் கை தேர்ந்தவர்கள் நாம்.  இதோ.. அந்த மஞ்சள் நிறச் சுடிதார் சந்தைக்கு வந்துவிட்டது.


      நன்றி : அந்திமழை- நவம்பர்-18

Comments

படிக்கப் படிக்க மனசுக்குள் வெயிலும் மழையும் சேர்த்தடிக்கிறது...
S.Gomala said…
அழகான வரிகளோட தொடக்கம்..எப்போதுக்குமான பிடித்தவைகளில் ஒன்றாக மாறிப்போயிருக்கிறது இக்கட்டுரையோட வரிகள்..
கவிஞனின் பார்வையில் ரசனையான விமர்சனம்.இன்னுமொருமுறை முதலில் இருந்து படிக்கத் தூண்டுகிறது.
Thendral said…
Can able to see the film through the poet's eyes. Visualizing film through lines
Anonymous said…
Excellent review Sir.. super.. எதார்த்தம் இது தான் அழகா சொல்லி இருக்கிறீர்கள் இந்த வரிகள் "அப்புறமெல்லாம் ஒன்றுமில்லை அவ்வளவு தான்.
இந்த வாழ்வு அவ்வளவு தான் அனுமதிக்கிறது எனவே அவ்வளவு தான்.."

Popular posts from this blog

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

ஒரு ப்ரவுன்கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா ?

“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில் அவரது தொந்தி நிலத்தில்தேய்ந்து மோசமாக மூச்சுமுட்டியது ஏழாவதுமுறையாக குளியலைறைக்குச் சென்று சல்லடை போட்டார் தன் சகஎழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில் ” பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு அவரது பையையும் பரிசோதித்துவிட்டார். ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு. காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்து அதை கீழே தள்ளி விட்டிருக்கலாம். கண்களைப்பிடுங்கி கீழே வீசி பொறுமையாகத் துழாவினார். பிறகு கண்களை நம்பாமல் அவரே இறங்கிப் போனார். அவர் ஒன்றும் தரித்திர கலைஞர் அல்ல அவரிடம் இப்போது கூட சுளையாக 500 ரூபாய் இருக்கிறது. ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும் இடதுபுற எலாஸ்டிக் பட்டையில் அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக அவருக்கு தெரியாது. நாம் அசட்டை செய்வது போலவோ கிண்டலடிப்பது போலவோ அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை. அவரது இல்லத்து அரசி அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி அனுப்பியிருக்கிறார்.                 ...