Skip to main content

சேலம் மற்றுமொரு ஊரே

               
                               
                                                                                   

  நண்பனும் கவிஞனுமான  வே.பாபு  11/11/2018 அன்று மாலை சுமார் 6  மணியளவில்  உடல் நிலை கோளாறு காரணமாகக்   காலமானான்.  1974 ல்  பிறந்த பாபு  தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வந்தவன். எனினும் 100- கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளான். தக்கை  என்கிற சிற்றிதழின் ஆசிரியர்களுள் ஒருவன்.

  பாபுவின் கவிதைகள் எளியவை. சமத்காரங்கள் அற்றவை. உணர்ச்சிகரம் என்கிற ஒன்றைத் தவிர அதனிடம் வேறு ஆபரணங்கள் ஏதுமில்லை. இந்த நோக்கில் அந்தக் கவிதைகளை பலகீனமானவை என்று சொல்லி விடலாம். ஆனால் எல்லா தருணங்களிலும்  பலத்தால்  மட்டுமே பிரகாசித்து விட  முடியாது.  பலகீனம்  பளீரிடும் தருணங்களும் உண்டு. அங்கு துலங்குபவை அவன் சொற்கள். அவை தன் எளிய உடலால் வலிய மனங்களையும் அசைத்துப் பார்த்தன
.
   தாமிரபரணி படுகொலை, ஈழப்பிரச்சனை, வர்க்க முரண்கள்  என்று சில கவிதைகள் எழுதியபோதும் பாபு ஒரு எளிய  லெளகீக கவிதான். லெளகீகம் அவ்வளவு எளிதில்லை என்பது கூடவே சொல்லியாக வேண்டிய ஒன்று. அவனுடைய  நிறையக் கவிதைகளில் ஒரு முன்னறிவிப்பு போல மரணம் தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது.கூடவே ஒரு சிறுமியும் வருகிறாள். இனி அந்தச் சிறுமியின் மடிதனில் அவன் இளைப்பாறட்டும்.

   தக்கை அமைப்பு சார்ப்பாக பாபு ஒருங்கிணைத்த இலக்கிய கூட்டங்களுக்குத் தனிச் சிறப்புகள் உண்டு. வேறு வேறு நிலைப்பாடுகள் உடைய எழுத்தாளர்களையும் அவனால் எளிதாக ஒன்றிணைக்க முடிந்தது.அக் கூட்டங்கள் சுதந்திரமானவை. சுதந்திரத்திற்கே உரிய மகிழ்ச்சிகளையும், சிக்கல்களையும் கொண்டவை. அநேக கூட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். என்னளவில் கவிதை குறித்து நடந்த இரண்டு நாள் அமர்வொன்று மிக முக்கியமானது.

    இந்தக் கூட்டங்கள் சேலம் சிவா லாட்ஜில் நடக்கும். அல்லது அதை மையப்படுத்தி அருகில் எங்காவது நடைபெறும். அந்த விடுதியின் வாராண்டாவிலும், மொட்டை மாடியிலும்  மலைகளைப் பார்த்த படி அமர்ந்து,  விடிய விடிய பேசிக் களித்த  பொழுதுகளை மறப்பது கடினம். அங்கு புதிதாக வந்து செல்லும் இளம் எழுத்தாளன் கூட  அடுத்த சில நாட்களில் அன்றாட வாழ்க்கையில் ஒன்ற  முடியாது வினோத துயரங்களுக்கு ஆளாவதை நான் கண்டிருக்கிறேன்.  அப்படி அந்த விடுதி முழுக்க மகிழ்ச்சி வியாபித்திருக்கும்.” நீ ஒரு எழுத்தாளன் ; எழுத்தாளன் தவிர வேறு ஒன்றுமில்லை..”  என்று  அது உறுதிபடச் சொல்லி விடும்.

   நினைவேந்தல் உரையில்  செல்மா ப்ரியதர்சன் சொன்னது போல ‘செயல்முனைப்பும், தன்முனைப்பும் அவ்வளவு எளிதாக பிரிக்க முடியாதவை’.  ஆனால் பாபுவால் இயல்பாகவே தன்முனைப்பில் இருந்து விலகி நிற்க முடிந்திருக்கிறது. அவன் அரும்பாடுபட்டு ஒருங்கிணைக்கும்  கூட்டங்களில் “ ஒருங்கிணைப்பு” என்று வேறு யாராவது ஒருவரின் பெயரே இருப்பது வழக்கம். மேடையும் அவர் வசமே இருக்கும். பாபு கடைசி வரிசையிலோ அல்லது மதிய உணவிற்கான ஏற்பாடுகளிலோ இருப்பான்.

  யாரோ ஒரு  சம்பந்தமற்ற மனிதரின் வாயிலிருந்தும் “சேலம்”  என்கிற  சொல்லைக் கேட்கையில் மனத்துள் துள்ளி விழுமே ஒரு மீன், அந்த மீன் இப்போது சடலமாக மிதக்கிறது. இனி சேலம் மற்றுமொரு ஊரே. திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி என்பது போல அதுவும் வெறுமனே ஒரு ஊர் பெயராகிவிட்டது.

   வாதைகள் பாபுவை நொறுக்கிக் கொண்டிருக்கும் போதும், “ நான் உன்னோடே இருப்பேன் ; வாதை உன்  கூடாரத்தை அணுகாது “ என்றவாறு மனிதர்களைத் தேற்றி மீட்க அவனால் முடிந்திருக்கிறது. வீடு சவுக்கால் விளாசத் துவங்கும் போதெல்லாம்  நினைவில் வரும் முதல் முகம் அவன் முகமே. வீட்டில் இல்லாத எதோ ஒன்று அவனிடம் நிறைய இருந்திருக்கிறது. “ சேலம் போயிட்டு வந்தா எல்லாம் சரியாகிடும்...”  என்று உறுதியாக நம்பும் நண்பர்கள் சிலர் உண்டு.
   
“  இனி  நமக்கு நாம்தான் நண்பர்களே “


                   நன்றி : இந்து தமிழ்திசை

( 18/11/18-ல் வெளியான குறிப்பின் முழுவடிவம்)

   
                                               

                                                             




 




                                                                                                                                       

                                                                     




 

















Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம