Skip to main content

சேலம் மற்றுமொரு ஊரே

               
                               
                                                                                   

  நண்பனும் கவிஞனுமான  வே.பாபு  11/11/2018 அன்று மாலை சுமார் 6  மணியளவில்  உடல் நிலை கோளாறு காரணமாகக்   காலமானான்.  1974 ல்  பிறந்த பாபு  தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வந்தவன். எனினும் 100- கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளான். தக்கை  என்கிற சிற்றிதழின் ஆசிரியர்களுள் ஒருவன்.

  பாபுவின் கவிதைகள் எளியவை. சமத்காரங்கள் அற்றவை. உணர்ச்சிகரம் என்கிற ஒன்றைத் தவிர அதனிடம் வேறு ஆபரணங்கள் ஏதுமில்லை. இந்த நோக்கில் அந்தக் கவிதைகளை பலகீனமானவை என்று சொல்லி விடலாம். ஆனால் எல்லா தருணங்களிலும்  பலத்தால்  மட்டுமே பிரகாசித்து விட  முடியாது.  பலகீனம்  பளீரிடும் தருணங்களும் உண்டு. அங்கு துலங்குபவை அவன் சொற்கள். அவை தன் எளிய உடலால் வலிய மனங்களையும் அசைத்துப் பார்த்தன
.
   தாமிரபரணி படுகொலை, ஈழப்பிரச்சனை, வர்க்க முரண்கள்  என்று சில கவிதைகள் எழுதியபோதும் பாபு ஒரு எளிய  லெளகீக கவிதான். லெளகீகம் அவ்வளவு எளிதில்லை என்பது கூடவே சொல்லியாக வேண்டிய ஒன்று. அவனுடைய  நிறையக் கவிதைகளில் ஒரு முன்னறிவிப்பு போல மரணம் தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது.கூடவே ஒரு சிறுமியும் வருகிறாள். இனி அந்தச் சிறுமியின் மடிதனில் அவன் இளைப்பாறட்டும்.

   தக்கை அமைப்பு சார்ப்பாக பாபு ஒருங்கிணைத்த இலக்கிய கூட்டங்களுக்குத் தனிச் சிறப்புகள் உண்டு. வேறு வேறு நிலைப்பாடுகள் உடைய எழுத்தாளர்களையும் அவனால் எளிதாக ஒன்றிணைக்க முடிந்தது.அக் கூட்டங்கள் சுதந்திரமானவை. சுதந்திரத்திற்கே உரிய மகிழ்ச்சிகளையும், சிக்கல்களையும் கொண்டவை. அநேக கூட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். என்னளவில் கவிதை குறித்து நடந்த இரண்டு நாள் அமர்வொன்று மிக முக்கியமானது.

    இந்தக் கூட்டங்கள் சேலம் சிவா லாட்ஜில் நடக்கும். அல்லது அதை மையப்படுத்தி அருகில் எங்காவது நடைபெறும். அந்த விடுதியின் வாராண்டாவிலும், மொட்டை மாடியிலும்  மலைகளைப் பார்த்த படி அமர்ந்து,  விடிய விடிய பேசிக் களித்த  பொழுதுகளை மறப்பது கடினம். அங்கு புதிதாக வந்து செல்லும் இளம் எழுத்தாளன் கூட  அடுத்த சில நாட்களில் அன்றாட வாழ்க்கையில் ஒன்ற  முடியாது வினோத துயரங்களுக்கு ஆளாவதை நான் கண்டிருக்கிறேன்.  அப்படி அந்த விடுதி முழுக்க மகிழ்ச்சி வியாபித்திருக்கும்.” நீ ஒரு எழுத்தாளன் ; எழுத்தாளன் தவிர வேறு ஒன்றுமில்லை..”  என்று  அது உறுதிபடச் சொல்லி விடும்.

   நினைவேந்தல் உரையில்  செல்மா ப்ரியதர்சன் சொன்னது போல ‘செயல்முனைப்பும், தன்முனைப்பும் அவ்வளவு எளிதாக பிரிக்க முடியாதவை’.  ஆனால் பாபுவால் இயல்பாகவே தன்முனைப்பில் இருந்து விலகி நிற்க முடிந்திருக்கிறது. அவன் அரும்பாடுபட்டு ஒருங்கிணைக்கும்  கூட்டங்களில் “ ஒருங்கிணைப்பு” என்று வேறு யாராவது ஒருவரின் பெயரே இருப்பது வழக்கம். மேடையும் அவர் வசமே இருக்கும். பாபு கடைசி வரிசையிலோ அல்லது மதிய உணவிற்கான ஏற்பாடுகளிலோ இருப்பான்.

  யாரோ ஒரு  சம்பந்தமற்ற மனிதரின் வாயிலிருந்தும் “சேலம்”  என்கிற  சொல்லைக் கேட்கையில் மனத்துள் துள்ளி விழுமே ஒரு மீன், அந்த மீன் இப்போது சடலமாக மிதக்கிறது. இனி சேலம் மற்றுமொரு ஊரே. திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி என்பது போல அதுவும் வெறுமனே ஒரு ஊர் பெயராகிவிட்டது.

   வாதைகள் பாபுவை நொறுக்கிக் கொண்டிருக்கும் போதும், “ நான் உன்னோடே இருப்பேன் ; வாதை உன்  கூடாரத்தை அணுகாது “ என்றவாறு மனிதர்களைத் தேற்றி மீட்க அவனால் முடிந்திருக்கிறது. வீடு சவுக்கால் விளாசத் துவங்கும் போதெல்லாம்  நினைவில் வரும் முதல் முகம் அவன் முகமே. வீட்டில் இல்லாத எதோ ஒன்று அவனிடம் நிறைய இருந்திருக்கிறது. “ சேலம் போயிட்டு வந்தா எல்லாம் சரியாகிடும்...”  என்று உறுதியாக நம்பும் நண்பர்கள் சிலர் உண்டு.
   
“  இனி  நமக்கு நாம்தான் நண்பர்களே “


                   நன்றி : இந்து தமிழ்திசை

( 18/11/18-ல் வெளியான குறிப்பின் முழுவடிவம்)

   
                                               

                                                             




 




                                                                                                                                       

                                                                     




 

















Comments

Popular posts from this blog

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...