வழக்கமான குடிகாரன்
வழக்கமான மதுவிடுதிக்குள்
வழக்கம் போல் நுழைகிறான்
வழக்கமான சிப்பந்தி
வழக்கமான வணக்கத்துடன்
”வழக்கம் போல் தானே..? “
என்று கேட்டான்.
“வழக்கம் போல் தான் ...” என்று சொல்லிவிட்டு
வழக்கமான இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்
வழக்கமான கோழிக்கறி
வழக்கமான தட்டில்
வழக்கமான சத்தத்துடன் முன்வைக்கப்பட்டது
வழக்கமான சுதியில்
வழக்கமான எண்களை அழைத்து
வழக்கமான கண்ணீரைக் கொட்டினான்
வழக்கமான சொற்களால் நீவி விடப்பட்டான்
வழக்கமான நேரம் வந்ததும்
வழக்கம் போல் எழுந்து கொண்டு
வழக்கமான சாய்வில்
வழக்கநடை நடந்து வெளியேறுகிறான்.
பக்கத்தில் தான் இருக்கிறது
புத்தம்புதுமைகளின் கூடாரம்
அங்கு வந்தவன்தான் இவன்.
Comments