கெடாமீசை தடியனொருவன்
குழந்தையின் கழுத்தைத் திருகப் பார்த்தான் தூண்களைப் போன்ற கால்களுக்கிடையில் புகுந்து அது தப்பியோடியது. தடியன் துரத்திக் கொண்டோடினான். பொந்து போன்ற மறைவிடத்தில் குழந்தை சுருண்டு ஒளிந்து கொண்டது. தடியன் இப்போது தோல்வியில் உறுமும் வெறிமூண்ட விலங்கு. அளந்து வைத்தது போன்ற கச்சிதமான பொந்து குழந்தையைக் காத்தருளி விட்டது. பெரிய ஆபத்து நீங்க இருந்த தருணத்தில் பொடிக்கல் ஒன்றை எடுத்து தடியனின் பிடரிமேல் எறிகிறது குழந்தை. |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments