கம்பளி போய்விட்டது ஆண்டாள் போய் விட்டாள் ஆயர்பாடி போய் விட்டது காய்ச்சலும் இருமலும் போய் விட்டன. கூம்பு ஹாரன்கள் போய் விட்டன. 'நாய்க்கூட்டம்' போய் விட்டது. குளிர் காய்ச்சிய தேநீர் போய்விட்டது விக்ஸ்புட்டிக்குள் ஒளிந்திருக்கும் காமம் காணாமல் போய் விட்டது உள்ளங்கைகள் ஒன்றோடொன்று உரசும் காட்சிகள் போய் விட்டன உதட்டு வெடிப்புகள் போய் விட்டன. ஓயாத பொங்கல் மணம் ஓய்ந்து போய் விட்டது. மாட்டுத்தொழுவத்து லீலி மலர் போய் விட்டது. முற்றத்துக் கோலங்கள் போய் விட்டன. அதனோடே போய்விட்டன குதிகால் பிறைகளும். நீர்த்துளிகள் மொய்க்கும் விரிநறுங்குழலிர் ஐயோ...! போயே விட்டனர். இவை போல் இன்னும் பல பரிவாரங்கள் உனக்கு இத்தனையும் கூட்டிக் கொண்டு எங்குபோய் மறைந்தாய் மார்கழி? |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."
Comments