Skip to main content

இசை கவிதைகள் - அகழ்

 


ன்று விட்ட சித்தப்பா

நம்பியிருந்த நிலம்
அவனை
தலைகுப்புறக் கவிழ்த்துவிட்டது.

சாக்கடைக்குள் உருளவில்லையாயினும்
ஓரமாய்ச் சரிந்து விட்டான்.

வாந்திக்குள் விழுந்து கிடக்கும்
நாற்றத்தைத் தேடி யார் வருவார்கள்?

அவனே கண்விழித்து
அவனே கை ஊன்றி
அவனே எழுந்தால்தானே உண்டு?

ஆனால் கதை அப்படியில்லை

ஒரு ஆட்டோவுக்குள்ளிருந்து
5 பேர் ஓடி வந்தனர்

வரவே மாட்டேன் என்கிற முகத்தை
தூக்கிக் கொண்டு
அவன் மனைவி வந்திருந்தாள்

அதில் ஒருவர்
ஒன்று விட்ட சித்தப்பாவாம்
கண்ணீர் வழிய வழிய
அவன் மோவாயில் கொஞ்சி
கூப்பாட்டில் வினவுகிறார்

“ஐயோ…ராசா! உனக்கு என்னதான் வேணும்னு சொல்லு…”

இங்கு கொட்டிக் கிடக்கும்
இவ்வளவில்
ஒன்றைக் கூட கேட்க மாட்டேன்

ஆனாலும் சித்தப்பா
என்னை ஒரு முறை இப்படிக் கேளேன்.

OOO

னிதன் தன்னை மறக்கத் தேவையான பொருட்கள்

ஸ்வீடன் போய் வந்த நண்பன்
ஸ்வீடன் போக முடியாத நண்பர்களிடம்
கதை கதையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான்

ஸ்டோக்ஹோம் நகரில் ஒரு ஹோட்டல்…
ஹோட்டல் என்றால் கல்லும் மண்ணும் சேர்த்துக் கட்டியதல்ல
முழுக்க முழுக்க ஐஸ் கட்டிகளாலானது..
ஐஸ் ஹோட்டலில் ஒரு ஐஸ் பார்..
ஐஸ் மீது நடந்து சென்று
ஐஸ் மீது அமரலாம்.
கதவும், ஜன்னலும் ஐஸ்…
டேபிளும், சேரும் ஐஸ்…
அலங்காரங்கள் அத்தனையும் ஐஸ்
கிண்ணங்கள் எதுவும் கண்ணாடியல்ல
அவையும் முழுக்க முழுக்க ஐஸ்
கிண்ணம் கொஞ்சம் உருகினாலும்
எறிந்து விட்டு
இன்னொரு கிண்ணம்
அதுவும் உருகினால்
அடுத்த கிண்ணம்
ஐஸ் கிண்ணத்தில்
ஐஸ்ஸை உடைத்துப் போட்டு
அதனுள் மதுவை ஊற்றி…
பணியாளர் யாவரும்
ஐஸ் மனிதர்களா
என்று அவன் சொல்லவில்லை
இருந்தாலும் இருக்கலாம்

கேட்டுக் கொண்டிருந்த
நண்பர்களில் ஒருவனுக்கு
திறந்த வாய் மூடவில்லை
ஒரு யானையைக் கட்டிவைக்கும் அளவு
திறந்த வெளி

இன்னொருவன்
அவனே ஒரு அதிசயம்
அவனை எந்த அதிசயங்களாலும்
அசைத்து விட முடியாது
அவன்
தன் சிகரெட் கங்குக்குள்
எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறான்

மூன்றாமவன் இருக்கிறானே
அவன் கொஞ்சம் பாவம்
ஒரு வியாதி என்று கூட சொல்லலாம்
எல்லாவற்றையும் முந்திக் கொண்டு
அவனுள் ஒரு தத்துவம் உதித்து விட்டது

பிறகென்ன
தத்துவம் பெரும்பாலும்
கலங்கிய கண்களோடுதான் வருகிறது

OOO

ரத்தக்களரியான ஒரு வாழ்த்து

பண்டிகைக் காலம் வந்துவிட்டது

பொந்துக்குள்ளிருந்து வெளியே
தலைநீட்டும் பிராணியைப் போல
மெல்ல
எட்டிப் பார்க்கிறது உன் வாழ்த்து

பண்டிகைக் காலமெனில்

யாரும்
யாரை நோக்கியும் புன்னகைக்கலாம்

யாரும்
யாருக்கும் பரிசளிக்கலாம்

யாரும்
யாரிடமும் இனிப்பை எடுத்து நீட்டலாம் அல்லவா?

பண்டிகைக் காலம் வந்துவிட்டது

கழுதை வாலில்
பட்டாசு கொளுத்திக் கொண்டாடும்
சேட்டைக்கார சிறுவர் கூட்டம்
அப்படியொன்றும்
முற்றாக ஒழிந்து விடவில்லை.

நாம் இப்போது
ஒரே கிரகத்தில் வாழும் இருவரா அன்பே?

OOO

காதலே! காதலே!

நிகழ்ச்சி முடிந்து கிளம்புகையில்
“ என்னை பஸ் ஸ்டாண்டிலாவது இறக்கி விடுகிறாயா? “ என்று
உறுமினாள் என் காதலி

அரங்கின் வாயிலில்
இன்னொரு காதலி கை நீட்டினாள்
இவளைக் கண்டதும் அவள்
முகத்தைத் திருப்பிக் கொள்வாள்
என்று நினைத்தேன்
அதிசயமாக
இருவரும் பின்னிருக்கையைப் பகிர்ந்து கொண்டனர்.

“வீட்டிற்கு இரண்டு கி.மீ முன்பாகவே
இறங்கிக் கொள்வேன்”
என்கிற உத்தரவாதத்தோடு
ஒருத்தி முன் இருக்கையில் ஏறிக் கொண்டாள்.

“பின் சீட்டில் தாராளமாக
மூன்று பேர் உட்காரலாமே? “
என்கிற உரிமைக்குரலோடு
இன்னொருத்தி வந்து சேர்ந்தாள்.

கண்ணாடியில் பியர் நுரை வழிந்திறங்கிய போதுதான்
கூரை மீது
ஒரு சாகசக்காரி அமர்ந்திருப்பதை
அறிந்து கொண்டேன்.

கார் சென்று கொண்டிருக்கிறது

யாரும் இதில்
இறங்குவது போலில்லை.

நானும்
நிறுத்துவேன் என்று தோன்றவில்லை
.
ஆனால்
எங்கு செல்வது?

அதுவும் எனக்குத் தெரியவில்லை.

OOO

ந்தைச் சத்தத்திற்கிடையில்…

சந்தைக்கடை விரிப்பில்
காய் கறிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன

ஒரு பெண்
சரியான சில்லறைக்கு
வியாபாரத்தை முடித்து விட்டுக் கிளம்புகையில்
“நண்றிணே…”
என்று சொல்லி விட்டு நகர்கிறாள்

வாழைத் தண்டுக்கும்
பத்து ரூபாய்க்கும்
சரியாகப் போய் விட்டது

உபரியாய் வீற்றிருக்கும்
‘நன்றி’ யை கண்டு களிக்க
இதோ….
கடவுள் வந்து கொண்டிருக்கிறார்.

OOO

நன்றி : அகழ்

https://akazhonline.com/?p=8874




Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...