Skip to main content

Posts

Showing posts from 2025

வேறொரு கதை

அ ரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க விறைசெறி குழலி ஓங்க மெளலி ஏறியது இராமனின் முடியில் வீசிக் கொண்டிருந்த கவரியில் ஒன்று  மெல்ல மெல்ல ஓய்ந்து அசையாது நின்றுவிட்டது போற்றி கோஷங்களும் கொண்டாட்டக் கூச்சல்களும் ஆரவாரித்து ஓய்ந்த பொழுதில் தனித்து அதிர்ந்ததொரு உறுமல் சாமரதாரி ஒருவனின் பிளந்த வாயிலிருந்து காற்றின் கடு ஊளை அப்போது  அவையை நடுநடுக்கி உலுக்கியது ஒருத்தியின் கூப்பாடு “ அய்யோ….! “ “ அய்யய்யோ…!” புவியெலாம் புரக்கும் கொற்றவன் அந்த 'அய்யோ ' வின் காலில் சரிந்து விழுகிறான் பட்டுத் தெறித்து தூரப் பறந்து பொங்கு கடலில் வீழ்கிறது அவன் மணிமுடி கடல், அதைத் தன் இருண்ட ஆழங்களுக்குள் இழுத்துச் செல்கிறது.

கதிராட்டம்

ம லர்ப்புதரை  ஊடுருவும்  வெய்யோனின்  கதிரொன்று காய்வதை  மறந்து விளையாடத் துவங்கி விடுகிறது.

சரிவிலே எழுவதென்ன கண்ண பெருமானே !

பா டகர் பாடுகிறார் பாடிக் கொண்டிருக்கிறார் பாடிக் கொண்டிருக்கிறார் பாடகர்  ‘பாடத்’ துவங்கும் தருணம் என்றொன்றுண்டு பாடகர் ‘பாடத் ‘ துவங்கி விட்டார் “ ஓ..”  என்றெழுந்ததொரு  வாத்தியம்  “ம்” என்றொரு வாத்தியம் “ஆஹா..”  என்று   எங்கோ துள்ளியதொரு வாத்தியம் “ ச்….”  கொட்டி மறைந்ததொரு வாத்தியம் “வாவ்..”   வாய் திறந்து  கூச்செரியும் வாத்தியங்கள் ஆங்காங்கு  தாயைத் திட்டி   ஒரு கெட்ட வாத்தியம்  பிளாஸ்டிக் சேர் வாத்தியங்கள் செருப்புக் கால் வாத்தியங்கள் நெஞ்சத்து ஆனந்தம்…. அது ஒரு நிகரற்ற வாத்தியம் வாத்தியங்கள்  கூடிக் கூடிப் பெருகியதில் மேடை கொள்ளவில்லை இதோ.. இந்த மேடை  சமத்தில் சரிவதைக் காண்கிறேன் மேடை, அரங்கு என்று இரு வேறில்லை இப்போது

மாலை நடையை பறக்கவிட்டவள்

  ம ருந்துக்கடை கவுண்டரில் நின்று கொண்டிருந்தாள் ஒருத்தி  உள்ளே பெட்டி பெட்டியாய்  அடுக்கி  வைக்கப்பட்டிருக்கும்  அவற்றிற்கும் உனக்கும் என்னடி சம்பந்தம்! இந்த வீதிக்கும் உனக்குமே கூட இந்த ஊருக்கும் உனக்குமே கூட இந்த நகருக்கும் உனக்குமே கூட  என்னடி சம்பந்தம்! அய்யோ.... உன்னைக் கொண்டு போய் எங்கடீ நிறுத்துவேன்! எங்குதான் ... எங்குதான்... நிறுத்துவேன் ! ஆம்... அப்படித்தான்.. மிகமிகச் சரிதான்.. நீ அங்கேயே நில் அரு மருந்தே! தனி மருந்தே!

குழப்பத்தின் தெள்ளத் தெளிவு

எ ன் இடது கை உனது வலது கையுடன் பிணைந்துள்ளது இது காரா? அல்லது கன்றுக்குட்டியா? தமிழக அரசால் வழங்கப்பட்ட  எண் பலகைகள்  முன்னும் பின்னும் ஒட்டப்பட்டுள்ளன ஆனால், வாகனம்  இப்போது தமிழக அரசின் கீழ் இல்லை எந்த அரசின் கீழும் இல்லை. நமது கடிகாரங்களை காற்று அடித்துப் போய்விட்டது இந்த வாகனம் ஒரு போதும் வழி தவற வாய்ப்பில்லை ஏனெனில் இதற்கு வழி என்றே ஒன்றில்லை  அக்கறையில் கலந்த எரிச்சலோடு கேட்கிறாள்  கூகுள் அக்கா.. “எங்குதான் போகிறீர்கள் ?!” “தெரியவில்லை அக்கா..”

உவமையிலா

அ ந்த மரம் கூவியது அந்த வீடு கூவியது வீதி கூவியது கடைகளும், கட்டிடங்களும் கூவின கோவில் கூவியது குளம் கூவியது. வீட்டிற்குள் சென்று சாத்திக் கொள்ளும்வரை என் தலைக்குப் பின்னே மொத்த மொத்தமும் கூவிக் கொண்டிருந்தன

மலர் திறப்பு

ஒ ரு மே ஃபிளவர் தன் இரத்த உயிரால் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது நான் அதை நோக்கிப் புன்னகைத்தேன் சென்றேன் நெருங்கினேன் தொட்டேன் ஓர்  இதழ்திறந்து நுழைந்தேன் நடந்தேன்.. நடந்தேன்.. நடந்தேன்.. கண்டு வந்தவன் சொல்கிறேன் ஒரு மலருக்குள் அந்த ஊரையே வைக்குமளவு இடமிருக்கிறது.

பைத்தியங்கள்

உ னக்கென்ன பைத்தியமா….? அவள் கத்திக் கொண்டிருக்கிறாள் அவன் தலைகுனிந்து நிற்கிறான் பிறகவன் தன் கண்களை எடுத்து அவள் முகத்தில் விட்டான் தன் காதுகளைக் கிள்ளி அவளுக்குச் சூட்டினான் தன் நெஞ்சத்தை  அவளுள் துடிக்க விட்டான் கண்கள் அவை கொழுத்த ஆசையை இரண்டு துண்டாய் உருட்டிய உருண்டைகள் செவிகள் அவை புறத்திற்கொன்றெனப்  படுத்திருக்கும் இரண்டு வேட்டை   நாய்கள் நெஞ்சம் அதில் கொசுத்திரள் கொடுக்கின் கும்மாளக் கூச்சல் உனக்கென்ன பைத்தியமா…? அவன் கத்திக் கொண்டிருக்கிறான் அவள் தலைகுனிந்து நிற்கிறாள்.

எப்படியாயினும்

“ச த்தியம் தோற்பதில்லை!" இதைச் சொன்ன போது என் நெஞ்சம் விம்மியது கண்கள் கொஞ்சம் கலங்கின முஷ்டி தானாகவே விண்ணை முட்டியது. "என்னையா அழைத்தாய்.."? என்று கேட்டு என்னை நோக்கி  சத்தியங்கள்  எழுந்து வந்தன. வெள்ளையில் கருப்பில் கருப்பு வெள்ளையில் பழுப்பில் ஆரஞ்சில் ஊதாவில் கலக்கவே முடியாத கலவைகளில் வானவில்லின் நிறத்தில் கூட ஒன்று இருந்தது. "என்னையா அழைத்தாய்...? இந்த முறை கொஞ்சம் சத்தமாக கேட்டன நான் அதைவிடச் சத்தமாய் அண்ணாந்து கூவினேன்... "எப்படியாயினும் ஏதோ ஒரு  சத்தியம் தோற்பதில்லை"

மலையருள்

ஆ க உச்சியிலிருந்து பாதாளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஒரு லாரி ஊர்ந்து செல்கிறது சத்தம் நீக்கப்பட்ட லாரி இருவர் அநேகமாக ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டு செல்கின்றனர் அன்பா..?  சண்டையா..? சாதாரணமா..? அறியமுடியவில்லை லாரி பொம்மை கார் பொம்மை ஆண் பொம்மை பெண் பொம்மை வீட்டு பொம்மை கடை  பொம்மை பொம்மை.. பொம்மை.. பொம்மை.. இரத்தமில்லை காயமுமில்லை.

எழுந்தருளல்

  ப ழக்கதோஷத்தில் நான் கிள்ளிப் பூசிய திருநீற்றின் மீது நீ  தொட்டுத் தீட்டிய தீற்றலில் எழுந்ததொரு தெய்வம் அவ்வளவு கும்பலுள் அதை நான் மட்டுமே பார்த்தேன் நான் மட்டுமே பாடினேன் அதற்கு ஆயிரமாயிரம் கரங்கள் அத்தனையத்தனை விழிகள் ஆயினும் நான் “ போதும்” என்று   சொல்லிவிட்டேன்

"போகாதே….!"

  பே ருந்தோ ரயிலோ காத்திருக்காது வீடு பொறுக்காது வேலை பொறுக்காது அந்த நான்கு பேர் உறுதியாகப் பொறுக்க மாட்டார்கள் எனக்குத் தெரியாதா என்ன? என் முகம் வாடுவது கண்டு பூதலத்தில் எதுவொன்றும் வாடி விடாது கண்ணீரை  நான் எவ்வளவு காலமாய் கண்டுவருகிறேன் என் கண்ணீர்… அம்மாவின் கண்ணீர்.. பாட்டியின் கண்ணீர்.. அவள் பாட்டியின் கண்ணீர்.. மானுடம் தோன்றிய காலம் தொட்டு கண்ணீரால் எதையுமே  தடுத்து விட முடிந்ததில்லை ஆனாலும் சொல்வேன்… "போகாதே…!"

காதலில் தோல்வியுண்டோ கண்மணி?

  கா தலில் தோல்வி என்றானவுடன் நேராக பெட்டிக் கடைக்குச்  செல்கின்றனர் சிலர் காதல் தோல்வி சிகரெட்  என்றொன்றுண்டு. என் பால்யத்தில் சசியண்ணனை  அந்த சிகரெட்டுடன் பார்த்திருக்கிறேன் மாலை இருளுள் ரயில்வே ஸ்டேசனின் நீளமான சிமெண்ட் பெஞ்சில்  தனியே அமர்ந்திருந்தார் அப்போது கன்னங்களில் வற்றிய கண்ணீர்த் தடம் ஆயினும் முகமென்னவோ இருண்டுவிட வில்லை அதில் வேறொரு வெளிச்சம் உலகைக்  கொன்று புதைக்கும் வெறிக்கு பதில் அவர் வாய்க்கால் பறவைக்கு  பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மிக மிக உறுதியாக அவர் சிங்கத்தின்  வாயினுள் இல்லை அந்த இதழ்கடை இனிப்பு கூட எனக்கு இப்போதும்  நினைவிருக்கிறது. காதலில் தோல்வி கண்டவரின் கேசத்தை அலசுவதற்கென்றே ஒரு காற்றுண்டு என்பதை அன்றுதான் கண்டு கொண்டேன் அவ்வளவு அழகை  அள்ளிக்கொண்டு வரும் காற்று காதல் தோல்வி சிகரெட்டுகள் என்றொரு வகையுண்டு தான் நான் என் முதல் சிகரெட்டை ஏற்றுகிறேன் அதோ… அந்தக் காற்று வருகிறது