Skip to main content

நந்தவனத்தாண்டி பாடல்கள்


1.அவனைக் கொண்டு போய் நீ
அருவிக்கு பக்கத்தில் நிறுத்தினாய்.
பிறகு அருவிக்குள் கொண்டு நிறுத்தினாய்.
அவன் இது வரை பார்தேயிராத அருவி அது.
தண்நீர் அவன் தலையில் விழுந்து
தேகமெங்கும் வழிந்தது.
மெல்லிய விசும்பல்களை, ஒரு கனத்த அழுகையை
அது கரைத்துக் கொண்டோடியது.
அவன் அப்போதே அங்கிருந்து ஓடி விடத் துடித்தான்.
நீ தான் விடவில்லை.
இன்று துரத்தியடிக்கப்பட்டிருக்கிறான்.


2. நீ அவனுக்கென மதுரமான உணவுகளைச் சமைத்தாய்.
அழகான விரிப்புகள் போர்த்தப்பட்ட மேசையில் இருத்தினாய்.
பளிங்கு போன்ற குடுவையில் நீர் வைத்தாய்.
அவன் பசியறியாதவள் நீ.
அவன் முகம் முழுக்க சாப்பிட்டான்.
நெஞ்செங்கும் நீர் குடித்தான்.
காணச் சகியாத நீ
கண்களைத் திருப்பிக் கொண்டாய்.



3. நாம் கதைகளில் மட்டும் படித்திருக்கிற
பொன் நிறப் பறவையொன்று அவன் வீடு தேடி வந்தது.
கண் கூசி முகம் ஜொலித்தது அவனுக்கு.
100 முறை ஸ்பரிசித்து விட்டால்
ஓடி விடும் பறவை அது.
அவன் முதல் நாளே 74 முறை தடவிக் கொடுத்தான்.
பிறகு விவரம் அறிந்து பதறியவன்
இனி தொடவே மாட்டேன் என்று சொல்வதற்காக
நூறாவது முறை தொட்டான்.


4. அவனுக்கு தெரியவில்லை
10 மீட்டர் இடைவெளியில்
எப்படி பயணிப்பதென்று.



5. சர்க்கரை அதிகமான காப்பியை
உனக்கு பிடிப்பதில்லை.
எல்லாம் சரி விகிதத்தில் கலந்த
ஒரு காப்பியை
அவனால் உனக்கு தர இயலவில்லை.



6. கீழே
சிறிய எழுத்துக்களில்
நட்சத்திரக் குறியிட்டு
“கண்டிசன்ஷ் அப்ளை” என்று
ஒரு வரி எழுதியிருந்தாய்.
அவன் அதை கவனித்திருக்க வில்லை.


7.அன்பின் வாலொன்று அவ்ன் பின் புறத்தில்
துருத்த துவங்கியது.
அது நீண்டு வளர்ந்து உன் கால்களை இறுக்கிய போது
தீயில் இட்டுச் சிவப்பாக்கிய
ஒரு இரும்புச் சொல்லால்
அதை ஒண்டக் கருக்கினாய்


நன்றி; சிக்கிமுக்கி.காம்

Comments

நிதர்சனம்.
Anonymous said…
மயிர்!
உணர்ந்தவனால் உணரமுடியும் உணர்வுகள் ........அருமையான வார்த்தையாடல்

Popular posts from this blog

குத்துப்பாடல்களுக்கிடையே ஒரு ஆட்டம்

                                                                                                       நண்பர் செந்தில்   தான் புதிதாக துவங்க இருக்கிற மின்னிதழுக்காக   பொறுப்பான வேலையொன்றை தந்து செய்துதரச் சொன்னார் . அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை . ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன் . ஆகவே   “ பொறுப்பற்ற வேலையொன்றை “ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன் . அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்ட...

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

கரகரப்பின் மதுரம்

நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா. எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.   ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒ...