Skip to main content

நந்தவனத்தாண்டி பாடல்கள்


1.அவனைக் கொண்டு போய் நீ
அருவிக்கு பக்கத்தில் நிறுத்தினாய்.
பிறகு அருவிக்குள் கொண்டு நிறுத்தினாய்.
அவன் இது வரை பார்தேயிராத அருவி அது.
தண்நீர் அவன் தலையில் விழுந்து
தேகமெங்கும் வழிந்தது.
மெல்லிய விசும்பல்களை, ஒரு கனத்த அழுகையை
அது கரைத்துக் கொண்டோடியது.
அவன் அப்போதே அங்கிருந்து ஓடி விடத் துடித்தான்.
நீ தான் விடவில்லை.
இன்று துரத்தியடிக்கப்பட்டிருக்கிறான்.


2. நீ அவனுக்கென மதுரமான உணவுகளைச் சமைத்தாய்.
அழகான விரிப்புகள் போர்த்தப்பட்ட மேசையில் இருத்தினாய்.
பளிங்கு போன்ற குடுவையில் நீர் வைத்தாய்.
அவன் பசியறியாதவள் நீ.
அவன் முகம் முழுக்க சாப்பிட்டான்.
நெஞ்செங்கும் நீர் குடித்தான்.
காணச் சகியாத நீ
கண்களைத் திருப்பிக் கொண்டாய்.



3. நாம் கதைகளில் மட்டும் படித்திருக்கிற
பொன் நிறப் பறவையொன்று அவன் வீடு தேடி வந்தது.
கண் கூசி முகம் ஜொலித்தது அவனுக்கு.
100 முறை ஸ்பரிசித்து விட்டால்
ஓடி விடும் பறவை அது.
அவன் முதல் நாளே 74 முறை தடவிக் கொடுத்தான்.
பிறகு விவரம் அறிந்து பதறியவன்
இனி தொடவே மாட்டேன் என்று சொல்வதற்காக
நூறாவது முறை தொட்டான்.


4. அவனுக்கு தெரியவில்லை
10 மீட்டர் இடைவெளியில்
எப்படி பயணிப்பதென்று.



5. சர்க்கரை அதிகமான காப்பியை
உனக்கு பிடிப்பதில்லை.
எல்லாம் சரி விகிதத்தில் கலந்த
ஒரு காப்பியை
அவனால் உனக்கு தர இயலவில்லை.



6. கீழே
சிறிய எழுத்துக்களில்
நட்சத்திரக் குறியிட்டு
“கண்டிசன்ஷ் அப்ளை” என்று
ஒரு வரி எழுதியிருந்தாய்.
அவன் அதை கவனித்திருக்க வில்லை.


7.அன்பின் வாலொன்று அவ்ன் பின் புறத்தில்
துருத்த துவங்கியது.
அது நீண்டு வளர்ந்து உன் கால்களை இறுக்கிய போது
தீயில் இட்டுச் சிவப்பாக்கிய
ஒரு இரும்புச் சொல்லால்
அதை ஒண்டக் கருக்கினாய்


நன்றி; சிக்கிமுக்கி.காம்

Comments

நிதர்சனம்.
Anonymous said…
மயிர்!
உணர்ந்தவனால் உணரமுடியும் உணர்வுகள் ........அருமையான வார்த்தையாடல்

Popular posts from this blog

வெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு

  பி யானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது  சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘ஷர்ப்’ பைத் தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை  ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை  கண்களில் காட்ட 47 ஆண்டுகள்  வேண்டுமோ உமக்கு?

தோழர் !

          கடவுள் எனக்குச் செய்யும் ஒரே ஒரு உருப்படியான காரியம் அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டு விடுவதுதான் இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள் ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள் என்னைத் தூரத்தில் கண்டதுமே சர்க்கரை குறைவான, ஆற்றாத தேநீர் ஒன்றை தயாரிக்கத் துவங்கி விடுகிறார் கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர் நான் வரும் முன்பே என் வழக்கமான டேபிளில் டீ வந்து அமர்ந்திருக்கும். அதை ஒரு பூச்செண்டு என்று உணர்ந்த கொண்ட நாளில் அவருக்கே கேட்காதபடி கண்ணீரை மறைத்துக் கொண்டு அவரைத் " தோழர்! " என்றழைத்தேன்.

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...