Skip to main content

நந்தவனத்தாண்டி பாடல்கள்


1.அவனைக் கொண்டு போய் நீ
அருவிக்கு பக்கத்தில் நிறுத்தினாய்.
பிறகு அருவிக்குள் கொண்டு நிறுத்தினாய்.
அவன் இது வரை பார்தேயிராத அருவி அது.
தண்நீர் அவன் தலையில் விழுந்து
தேகமெங்கும் வழிந்தது.
மெல்லிய விசும்பல்களை, ஒரு கனத்த அழுகையை
அது கரைத்துக் கொண்டோடியது.
அவன் அப்போதே அங்கிருந்து ஓடி விடத் துடித்தான்.
நீ தான் விடவில்லை.
இன்று துரத்தியடிக்கப்பட்டிருக்கிறான்.


2. நீ அவனுக்கென மதுரமான உணவுகளைச் சமைத்தாய்.
அழகான விரிப்புகள் போர்த்தப்பட்ட மேசையில் இருத்தினாய்.
பளிங்கு போன்ற குடுவையில் நீர் வைத்தாய்.
அவன் பசியறியாதவள் நீ.
அவன் முகம் முழுக்க சாப்பிட்டான்.
நெஞ்செங்கும் நீர் குடித்தான்.
காணச் சகியாத நீ
கண்களைத் திருப்பிக் கொண்டாய்.



3. நாம் கதைகளில் மட்டும் படித்திருக்கிற
பொன் நிறப் பறவையொன்று அவன் வீடு தேடி வந்தது.
கண் கூசி முகம் ஜொலித்தது அவனுக்கு.
100 முறை ஸ்பரிசித்து விட்டால்
ஓடி விடும் பறவை அது.
அவன் முதல் நாளே 74 முறை தடவிக் கொடுத்தான்.
பிறகு விவரம் அறிந்து பதறியவன்
இனி தொடவே மாட்டேன் என்று சொல்வதற்காக
நூறாவது முறை தொட்டான்.


4. அவனுக்கு தெரியவில்லை
10 மீட்டர் இடைவெளியில்
எப்படி பயணிப்பதென்று.



5. சர்க்கரை அதிகமான காப்பியை
உனக்கு பிடிப்பதில்லை.
எல்லாம் சரி விகிதத்தில் கலந்த
ஒரு காப்பியை
அவனால் உனக்கு தர இயலவில்லை.



6. கீழே
சிறிய எழுத்துக்களில்
நட்சத்திரக் குறியிட்டு
“கண்டிசன்ஷ் அப்ளை” என்று
ஒரு வரி எழுதியிருந்தாய்.
அவன் அதை கவனித்திருக்க வில்லை.


7.அன்பின் வாலொன்று அவ்ன் பின் புறத்தில்
துருத்த துவங்கியது.
அது நீண்டு வளர்ந்து உன் கால்களை இறுக்கிய போது
தீயில் இட்டுச் சிவப்பாக்கிய
ஒரு இரும்புச் சொல்லால்
அதை ஒண்டக் கருக்கினாய்


நன்றி; சிக்கிமுக்கி.காம்

Comments

நிதர்சனம்.
Anonymous said…
மயிர்!
உணர்ந்தவனால் உணரமுடியும் உணர்வுகள் ........அருமையான வார்த்தையாடல்

Popular posts from this blog

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?