கோயமுத்தூர் மாநகராட்சியின்
93- வது வார்டில்
புதிதாக உருவாகியிருக்கிற மைதானத்தில்
மட்டையாட்டம் நிகழ்கிறது.
அங்கு ஒரிய மொழி ஒலி வீசுகிறது.
ஆட்டத்தின் முசுக்கரத்தில் கிளம்பும் புழுதியில்
ஒரு ”குட்டி ஒடிசா” எழுந்து வருகிறது.
ஒரு புளியமரம் பல தலைமுறைகள் காண்பது
இன்று
அம்மரத்தடியில் அமர்ந்திருக்கும் ரசிகர் கூட்டம்
” மாரோ... மாரோ... “ என்று கத்துகிறது.
அந்த இடதுகை ஆட்டக்காரன்
இறங்கி
ஒரு இழு இழுக்கிறான்.
மகிழ்ச்சியின் கூச்சலினூடே பறந்து செல்லும் அப்பந்து
மைதானத்தை தாண்டி,
ஒரு மூமுதுகிழவனின் தோளில் விழுகிறது.
அவன் அப்பந்தைத் தூக்கி
அதே மகிழ்ச்சியின் கூச்சலினூடே
திரும்ப எறிகிறான்.
அவனை ”கணியன் பூங்குன்றன்” என்றறிக !
Comments