புதிதாக ஒரு கொசுமட்டை வாங்கியதிலிருந்து
நிம்மதியாக இருக்கிறேன்.
கொசு விரட்டிகள்
கொசுக்களை விரட்டி விடுகின்றன.
ஆனால் மட்டை அவைகளை கொன்று தீர்க்கிறது.
ஒரு கொசு பறந்து போக
நானும் பறந்து போய்
சரியான வாகில் வைத்து ஒரே சாத்து…
இன்பம் என் உள்ளத்தில் ”பட்” என்று தெறிக்கிறது.
" பட்… பட்… பட்பட்பட்….”
இந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு கோடாரி
ஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து
"தயை”… "தயை”.. என்று கதறும்.
கதறலின் மண்டையில் ஓங்கி ஒரு போடு
” பட்..பட்..பட்பட்…. ” “ பட்பட்..பட்”
பிஸ்டலுக்கு எண்ணெய் போடுவது போலே
மட்டையில் மின்சாரம் ஏற்றுகிறேன்.
என் வீட்டின் முன்னே
குளம் போல தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன்.
கொசுவீர் !
பிறந்து எழுந்து திரண்டு வருக !
நன்றி ; காலச்சுவடு – பிப்ரவரி-2015
Comments