அந்த மனிதனுக்கு ஒரு நெருக்கடி
உடனடியாக
நன்றியுணர்ச்சியிலிருந்து வெளியேறியாக வேண்டும்
அது ஒன்றும் அவ்வளவு பெரிய உதவியில்லை...
அளவில் சிறியதுதான் என்று
எவ்வளவோ முறை தனக்குத் தானே
சொல்லிக் கொள்ளத் துணிகிறார்
அடுத்த கணமே
" காலத்தினாற் செய்த நன்றி " எனும் வரியால்
கடுமையாகத் தாக்குறுகிறார்
நன்றியுணர்ச்சி
எவ்வளவு வலுவானதொரு மிருகம் ...
இவரோ
ஒரு காக்கையைத் துரத்துவதைப் போலே
" உஸ்" உஸ்" என்கிறார்.
அது ஒரு வட்டமடித்து விட்டு
திரும்பவும் வந்து
இதயத்தின் கூரையில் அமர்ந்து கொள்கிறது.
நன்றியுணர்ச்சி
ஒரு நாகத்தைப் போலே
" புஸ்.." " புஸ்..." என்று சீறிக் கொண்டிருக்கிறது.
" புஸ்.." " புஸ்..." என்று சீறிக் கொண்டிருக்கிறது.
இவரோ ஒரு மோசமான அப்பாவி
அதன் வாலைப் பிடித்து இழுக்க முயல்கிறார்.
Comments