என் காதலி ஒரு ரஜினி ரசிகை என்பதை திடீரென அறிய நேர்ந்தது. சுப்ரமணிய பாரதியின் வரி ஒன்று தலை மேல் வந்து விழுந்தது. சிகரெட்டை வானத்திற்கு வீசி துல்லியமாக அதைத் துப்பாக்கி புல்லட்டால் பற்ற வைத்து மிகச் சரியாக வாயில் விழ வைக்கும் காட்சி ஒன்று ஓடி வந்து முன்னால் நின்றது. ஐந்து முறை " உஸ்" சொல்லியும் அசையாமல் அது அங்கேயே நிற்கிறது. ஆனால் ஆறு மாதங்கள் முன்பு ஒரு திரை விமர்சகரிடம் பேசிக் கொண்டிருந்த போது "கமலஹாசனோ மோகன்லாலோ அல்ல ரஜினிகாந்தான் சிறந்த நடிகர். அதிரடிக்காக சொல்ல வில்லை. ஆராய்ச்சியின் முடிவுதான்.." என்று சொன்னார். அவசரப்பட்டு அவர் எண்ணை வேறு அழித்துவிட்டேன். திரும்ப அழைத்துப் பேச வேண்டும். " மாயா லோகம்" இதழில் மாதாமாதம் கட்டுரை எழுதும் ஒருவர் பொய் சொல்ல வாய்ப்பில்லையல்லவா? தவிர ஓடுகிற ஜீப்பை ஒற்றைக் காலால் கட்டி நிறுத்துவது யோக முறைகளில் ஒன்றால் சாத்தியம்தான் என்பதை நான் வாசிக்க வந்த புதிதில் வாசித்துள்ளேன். 'எப்படி' என்பதை ' எப்டி' என்று உச்சரிக்கையில் அங்கு ஒரு புது அழகு பூத்து நிற்பதை நானும் சில முறை உணர்ந்துள்ளேன். வலது கையால் இடது கண்ணை மூடிவிட்டு மீதிக் கண்ணால் கொஞ்ச நேரம் ஆழந்து நோக்கினால் அந்தச் சின்னக் கண்ணில் ஒரு காந்தத் துண்டு ஆடுவதை கட்டாயம் நீங்கள் காண முடியும். அனைவரும் ஆம் என்போர் தானே நண்பர்களே! |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments