Skip to main content

ரஜினி ரசிகையின் காதலன்



ன் காதலி ஒரு ரஜினி ரசிகை 

என்பதை

திடீரென

அறிய நேர்ந்தது.


சுப்ரமணிய பாரதியின்

வரி ஒன்று

தலை மேல் வந்து விழுந்தது.


சிகரெட்டை வானத்திற்கு வீசி

துல்லியமாக

அதைத் துப்பாக்கி புல்லட்டால் 

பற்ற வைத்து

மிகச் சரியாக

வாயில் விழ வைக்கும் 

காட்சி ஒன்று 

ஓடி வந்து முன்னால் நின்றது.

ஐந்து முறை 

" உஸ்" சொல்லியும்

 அசையாமல் அது  அங்கேயே 

நிற்கிறது.


ஆனால்

ஆறு மாதங்கள் முன்பு 

ஒரு திரை விமர்சகரிடம் பேசிக் கொண்டிருந்த போது 

"கமலஹாசனோ

மோகன்லாலோ அல்ல

ரஜினிகாந்தான் சிறந்த நடிகர்.

அதிரடிக்காக சொல்ல வில்லை. 

ஆராய்ச்சியின் முடிவுதான்.." 

என்று சொன்னார்.

அவசரப்பட்டு 

அவர் எண்ணை வேறு அழித்துவிட்டேன்.

திரும்ப அழைத்துப் பேச வேண்டும்.

" மாயா லோகம்" இதழில்

 மாதாமாதம் கட்டுரை எழுதும் ஒருவர்

பொய் சொல்ல வாய்ப்பில்லையல்லவா?


தவிர

ஓடுகிற ஜீப்பை

ஒற்றைக் காலால் கட்டி நிறுத்துவது

யோக முறைகளில் ஒன்றால்

சாத்தியம்தான் என்பதை

நான் வாசிக்க வந்த புதிதில்

வாசித்துள்ளேன்.


'எப்படி' என்பதை

' எப்டி' என்று உச்சரிக்கையில்

 அங்கு ஒரு புது அழகு

பூத்து நிற்பதை

நானும் சில முறை உணர்ந்துள்ளேன்.


வலது கையால்

இடது கண்ணை மூடிவிட்டு 

மீதிக் கண்ணால் 

கொஞ்ச நேரம் ஆழந்து நோக்கினால்

அந்தச் சின்னக் கண்ணில்

ஒரு காந்தத் துண்டு 

ஆடுவதை

கட்டாயம் நீங்கள் காண முடியும்.


அனைவரும்

ஆம் என்போர் தானே

நண்பர்களே!


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...