Skip to main content

Posts

Showing posts from May, 2025

இசை கவிதைகள்

  எதையும் மறந்துவிடவில்லை அல்லவா?  புறப்பட்டுப் போகப் போகிறது மே ஃப்ளவர் * ஒரே ஒரு சின்னச் சிக்கல் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் நீ அதில் சிக்கல் என்னவெனில் நீ இருப்பது * வெஞ்சரம் நஞ்சில் புரட்டிய அம்பால் இதயத்தின் ஆழத்தைக் குடைவது வெகு எளிது உனக்கு ‘நீ’ யிலிருந்து ‘ நீங்களு’க்காய் ஒரு நொடிப் பொழுதின் சாகசம் * பார்க்கப் பார்க்க உன் ஈரக்கூந்தலை அடித்து உதறியதில் தெறித்த திவலைகளென வெளி முழுக்கச் சிவந்து நிற்கிறது மே ஃப்ளவர் ஜுன் வந்து கொண்டிருக்கிறது * நன்றி அகழ்! https://akazhonline.com/?p=10173

எப்படி எழுந்தனவோ

கவி தன் கவிதையைக் குறித்து தானே பேசுவதில் சில தர்மசங்கடங்கள் இருக்கின்றன. அந்தப் பேச்சில் இயல்பாக எழுந்து வரும் தற்பெருமை ஒரு  சிக்கல். தன் கவிதை குறித்து தானே பேச முனைகையில் எழுகிற சலிப்பு ஒரு சிக்கல்.  கவிக்கும் தன் கவிதையின் நதி மூலம் குறித்து  தோராயமாக அன்றி   துல்லியமாகத்  தெரிந்து விடாது என்பது இன்னொரு சிக்கல். பேசிப் பேசி கண் முன்னே தன் கவிதையின் அழகுகள் கரைந்து செல்வதை  அவன் சற்றும் விரும்புவதில்லை என்பது முக்கியமான சிக்கல். விளக்க முடியாத ஒன்று கவிதைக்குள் இருப்பதைப் போன்றே விளக்கக் கூடாத ஒன்றும் கவிதைக்குள் இருக்கிறது. ஆனாலும் கவிகள் கால காலமாக கவிதையைக் குறித்து பேசி வந்திருக்கிறார்கள். அதற்கு இலக்கணங்கள் வகுத்திருக்கிறார்கள். கவிதை அந்த இலக்கணங்களை உடைக்கையில் அதற்கு புதிய இலக்கணங்களை படைத்திருக்கிறார்கள்.தனது முழுத்தொகுப்பிற்கான முன்னுரையில் சுகுமாரன் எழுதியிருக்கும் ஒரு வரி “கவிதையாக்கம் குறித்துக் கொண்டிருந்த கொள்கைகளையும் பிடிவாதங்களையும் கவிதையே காலாவதி ஆக்குவதை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”.  இந்த உற்சாகம்தான் கவியைய...

மூன்று கவிதைகள்

மு தல் கனி  அந்தக் குழந்தை உலகிற்குப் புதுசு மூடிய காருக்குள்ளிருந்து கண்ணாடி வழியே வெளியே பார்த்தபடி வருகிறது சிக்னல் நிறுத்தத்தில்  ஒரு சிறுவன் காக்கி நிஜாரில் மேலாடையின்றி வியாபாரி போல் வந்தவன் அவன் தன் அழுக்குக் கையால் கூடைக் கொய்யாக்களில் ஒன்றினை எடுத்து குழந்தைக்குக்  காட்டுகிறான் காட்டிய  கணத்திலேயே ஊட்டியும் விட்டுவிட்டான் எட்டினால் தட்டிவிடும் தூரத்தில்தான் இருக்கிறார் அதன் அப்பா ஆனாலும் அதற்குள் அவ்வளவு தூரங்கள் அவரால் ஓடிவரக் கூடவில்லை. * க ண்டேன் சற்றே பெரிய ஊடல் போல அவள் சிரி... சிரி... சிரி..  எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவன்  துளியும் அசைந்துவிடாது  நின்று கொண்டிருந்தான் அவள் கன்னச் சதைகளை  இழுத்து இழுத்து விட்டாள் இறுக்கத்துள் கை நுழைத்து உதடுகளைப்  பிரித்து வைத்தாள் கடைசிவரை சிரிக்கவில்லை கல் அங்கே சிரித்துக் கொண்டிருந்த இன்னொன்றை நான் கண்டு சிரித்தேன். * ம னைவியின் முதல் கவிதை "பாயுது பாயுது நீரு பல எண்ணங்கள் போலே- வருது தண்ணீரு..." என்று முதல் அடி எடுத்தவள் ஏனோ  கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டாள் ஏரியைக் காட்டிலும் ஆ...

ஒளித்தொழித்தல்

எ ன் காதலைக் கையள்ளித் தெளித்தால் பல யோசனை தூரங்களுக்கு பச்சைப் பசேல்கள் காற்றாடி நிற்கும் அதைத்தான்… அன்பே….! அதைத்தான் நீ ஒளித்து வைக்கச் சொல்கிறாய்

ஆசை ஆசையாய்

  வெ ண்கலத்தில் இரும்பில் மரத்தில் பளிங்கில்,  பனியில் நின்ற கோலம் அமர்ந்த கோலம் கிடந்த கோலம் என கோலா கோலங்களில் ஷாப்பிங் மாலில் ஹோட்டல் முகப்பில் பெட்டாலியன் விடுதியில் முழு உருவில் தனித்தலையில் இரு விழியில் பேருந்தில் காரில் ஆட்டோவில் கருப்பில் வெளுப்பில் வண்ண வண்ணங்களில் மிகப் பெரிதாக சின்னஞ்சிறியதாக சுமாராக என ஆசை ஆசையாய் சிதறிக் கிடக்கும் அவ்வளவு  புத்தர்கள்

மூன்று கவிதைகள்

ந றுமணம் கொண்ட விசாலமான படுக்கை நட்சத்திர விடுதியின் விசாலமான அறையைத் திறந்து காட்டிய  பணியாள்  "நன்றி!"  என்று சொல்லிவிட்டு நகர்கிறான். நான் உடைந்து அழுகிறேன் * க சப்பின் குஷன் நான் மீண்டும் கசப்பிற்குத் திரும்பினேன். மகனைப் போருக்கு அனுப்பி விட்ட தாய் போல அது வாசலிலேயே நின்று கொண்டிருந்தது கசப்பு  ஒரு செளகர்யம் ஆதுரம் மேலும் அது எனக்கு நன்கு பரிச்சயமானது அதில் பரபரப்பில்லை. பதற்றமில்லை சாகசங்களில் வெறி மூண்ட  வேட்டையாள் ஒருவன் துப்பாக்கியை இறக்கி வைத்து விட்டு இப்போது புளியமரத்தடியொன்றில் தலை சாய்த்துக் கிடக்கிறான் கசப்பில் கசப்பைத் தவிர  வேறு ஒன்றுமேயில்லை முக்கியமாக இனிப்பில் இருக்கிற "உள்ளே என்ன இருக்கிறதோ?"  என்கிற வெடிகுண்டில்லை * எ ல்லாவற்றிற்கும் நன்றி! காதலர் வெடித்துச் சினக்கின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர். பிரிவே உத்தமம்  என்று  உறுதி பூண்கின்றனர் "எல்லாவற்றிற்கும் நன்றி!"  என்றவர்கள் பரஸ்பரம் செய்தி அனுப்பிக் கொள்கையில் "எதுவுமே இன்னும் முடியவில்லை" என்று எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு குரல்... அது யாருடைய குரல்

டி.வி யில் நடக்கும் போர்

டி .வி யில் நடக்கும் போர் என்பது காணக் கிடைக்காத வாணவேடிக்கை கண் கொள்ளாப் பிரகாஷம் திரைகள் எரியும் அதிரடி சண்டைக் காட்சிகள் நிஜத்தில் நிகழ்வது புத்தம் புது பரவசம் டொம்… டொம்… எனும் இனிய சங்கீதங்கள் ஐ.பி. எல் ஆட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதனாலென்ன ஜாலியானவர்களே! நாம் சேனலை மாற்றுவோம். அங்கு  ஐ.பி. எல்-  லைக் காட்டிலும்  ஜாலி ஒரு குழந்தை துடிதுடித்துச் சாகிற ஜாலி டி.வி யில் நடக்கும் போரில் திளைக்க கோழி இறைச்சியை துணை கொள்ளும் ரசிகப்  பெருமக்காள்..! எதற்கும் ஒரு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள்... “கோழி இறைச்சி தானே அது?”

நான் அதில் சிற்றெறும்பு

  நா ன் ஒரு எறும்பாய்ப் போய் விடுவதில் தீவிரம் கொண்டிருக்கிறேன் எறும்பெனில் எறும்பினும் எறும்பாக அவள் கழுத்தை ஊர்ந்து தீர்க்கையில் காலம் முடிந்திடும்  அளவு எறும்பாக அவ்வளவு எறும்பாக

ஆங்கிலத்தை இவர்கள் அறிவில்லா முண்டமெனக் கருதிவிட்டார்கள்

“தூ ங்காதே தம்பி…தூங்காதே..” என்பது காலாவதியாகிவிட்ட ஒரு அறிவுரை இன்றோ “தூங்குங்கள்…! தூங்குங்கள்..! என்று கை கூப்பி வேண்டுகிறது மருத்துவம் அவர்கள் இருவருமே தேக ஆரோக்கியத்தில் கவனம் கொண்டவர்கள் ஆகவே சரியாக பத்துமணிக்கு “good night” சொல்லிக் கொள்வார்கள். அரைமணி நேரம்  கழித்து அடுத்த “ good night “ “ good night ..!” “ good  night…!” “Good  night” க்கு தானொரு  “good night” தானா என்பதில் கொடூரமான குழப்பங்கள் தோன்றிவிட்டன அது புரட்டிய அத்தனை அகராதிகளும் ஆலோசித்த அவ்வளவு அறிஞர்களும் “good night “  என்றால் " good night" தான் என்று சொல்லி அதை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் இரும்புக் கதவில்  தலையை முட்டிக் கொண்டு அது இரத்தம் பெருக்கிய பொழுதில் அவர்கள் 13 வது “ good night”  சொல்லிக் கொண்டார்கள். சிற்றஞ்சிறுகாலை என்கிற “ good morning “ - ல் “ ok.. good night ..“ என்றவர்கள் அலுத்துக் கொண்ட போது ஆங்கிலத்திற்கு வெறி மூண்டுவிட்டது இரண்டு பொடணியிலும் பொளோர் பொளோரென நான்கு போடு போட்டது… “எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை  உண்டல்லவா? “

மோகினியாட்டம்

அ லுவலகத்தில் ஒரு சிறு பதவி உயர்வு. சால்வை அணிவிக்கிறார்கள் கொஞ்சம் பணமுடை கோல்டு லோன் கடையில் மணிக்கணக்காக  காத்திருக்க வேண்டியுள்ளது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது ஆம்புலன்ஸைப் பிடிக்க ஓடுகிறேன் அடுத்த மாதம் ஒரு கருத்தரங்கம் பழைய நூல்களைப் புரட்ட அடிக்கடி நூலகம் செல்ல வேண்டியுள்ளது. ஊரில் ஒரு பொதுப் பிரச்சனை முன்னணியில் நிற்பதால் கொலை மிரட்டல்கள் வருகின்றன அக்பர் யாரென்றே அறியாத ஒரு இளைஞன் என் போனை அக்பர் காலத்தது என்று  அறிவித்து விட்டான் நேற்று புதுச்செடியில் முதல் பூ வீட்டுப் பூனை ஈன்றிருக்கிறது ஒரே மியாவ்…மியாவ்… மியாவ்.. இவை எல்லாமே உன் 'ஹேண்ட் பேக்'குள் நடக்கின்றன.