முதல் கனி அந்தக் குழந்தை உலகிற்குப் புதுசு மூடிய காருக்குள்ளிருந்து கண்ணாடி வழியே வெளியே பார்த்தபடி வருகிறது சிக்னல் நிறுத்தத்தில் ஒரு சிறுவன் காக்கி நிஜாரில் மேலாடையின்றி வியாபாரி போல் வந்தவன் அவன் தன் அழுக்குக் கையால் கூடைக் கொய்யாக்களில் ஒன்றினை எடுத்து குழந்தைக்குக் காட்டுகிறான் காட்டிய கணத்திலேயே ஊட்டியும் விட்டுவிட்டான் எட்டினால் தட்டிவிடும் தூரத்தில்தான் இருக்கிறார் அதன் அப்பா ஆனாலும் அதற்குள் அவ்வளவு தூரங்கள் அவரால் ஓடிவரக் கூடவில்லை. * கண்டேன் சற்றே பெரிய ஊடல் போல அவள் சிரி... சிரி... சிரி.. எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவன் துளியும் அசைந்துவிடாது நின்று கொண்டிருந்தான் அவள் கன்னச் சதைகளை இழுத்து இழுத்து விட்டாள் இறுக்கத்துள் கை நுழைத்து உதடுகளைப் பிரித்து வைத்தாள் கடைசிவரை சிரிக்கவில்லை கல் அங்கே சிரித்துக் கொண்டிருந்த இன்னொன்றை நான் கண்டு சிரித்தேன். * மனைவியின் முதல் கவிதை "பாயுது பாயுது நீரு பல எண்ணங்கள் போலே- வருது தண்ணீரு..." என்று முதல் அடி எடுத்தவள் ஏனோ கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டாள் ஏரியைக் காட்டிலும் ஆழத்துள் பாய்ந்தவள் சிந்தையில் சட்டென்றொரு தீப்பொறி ‘தண்ணீரை ' அடித்து விட்டு 'கண்ணீரை' அங்கு இட்டு நிரப்பினாள் கண்ணீர் வந்தவுடன் கவிதை வந்துவிட்டது என்பதில் அவளுக்கு அவ்வளவு உறுதி ஆட்டவோ அசைக்கவோ முடியாத உறுதி |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments